வைகோவிற்கு பிரச்சாரம் செய்ய வரும் மோடி- ராம்ஜெத்மலானி
மதுரை: மதுரையை சுற்றியுள்ள சௌராட்டிரா இன மக்களின் வாக்குகளை வளைக்க நரேந்திர மோடியை பிரச்சாரத்திற்கு அழைத்துள்ளார் வைகோ.
அதேபோல வைகோவின் மீதுள்ள நட்பினால் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய சம்மதம் கூறியுள்ளாராம்.
லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். விருதுநகர் லோக்சபா தொகுதிக்குள் திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகள் வருகிறது.
மதுரையிலும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதியைச் சுற்றியும் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிர இன மக்கள்
இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக வசிக்கின்றனர்.

வெற்றி தோல்வி நிர்ணயம்
மதுரை, விருதுநகர் தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இந்த சௌராஷ்டிர இன மக்களின் பங்கு கணிசமானது.

பிரச்சாரத்திற்கு வரும் மோடி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சௌராட்டிரா இன மக்களுக்கு அதிக பாசம் உண்டு. எனவே விருதுநகர் வேட்பாளரான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விருதுநகர் அல்லது திருமங்கலத்தில் மோடியை அழைத்துவந்து பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

ஓட்டுக்களை அள்ளத் திட்டம்
இதன் மூலம் சௌராஷ்டிரா மக்களின் வாக்குகளை அப்படியே வாங்கிவிடலாம் என்பது திட்டம். மோடியும் பிரச்சாரத்திற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

ராம் ஜெத்மலானி பிரச்சாரம்
இதனிடையே வைகோவிற்காக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பிரச்சாரம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். 90 வயதான ராம்ஜெத்மலானி, திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

மாபெரும் பொதுக்கூட்டம்
ஏப்ரல் 5ம் தேதி திருமங்கலம் அல்லது திருப்பரங்குன்றத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வைகோ – ஜெத்மலானி நட்பு
மூவர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில் ராம்ஜெத்மலானியின் பங்கு முக்கியமானது. இந்த வழக்கிற்காக அவர் பணம் எதுவும் வாங்காமல் வாதாடினார். வைகோ - ராம்ஜெத்மலானி இடையேயான நட்பு நாடறிந்த ஒன்று. எனவே அவர் வைகோவிற்காக பிரச்சாரம் செய்வது உறுதி என்கின்றனர் மதிமுகவினர்.












Click it and Unblock the Notifications