நரேந்திரமோடி-ஜெயலலிதா சந்திப்பு ஆரோக்கியமானது, அரசியலுக்கானது இல்லை: தமிழிசை
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தபோதிலும், அதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது, அரசு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அரசு மீது தமிழிசை சவுந்தர்ராஜன் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் பிரதமர் மோடி, ஜெயலலிதா வீட்டுக்கே சென்று மதிய உணவு சாப்பிட்ட விவகாரம் குறித்து தமிழிசையிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்: தமிழக அரசு செய்யும் தவறுகளை ஒரு கட்சி என்ற முறையில் தமிழக பாஜக சுட்டிக் காட்டியுள்ளது. அதற்காக, முதல்வரை, நாட்டின் பிரதமர் சந்திக்க கூடாது என்று அர்த்தம் கிடையாது.

நரேந்திரமோடி எப்போதுமே, மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருபவர். அதன் அடிப்படையில், ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்.
அரசாங்கங்களுக்குள் கருத்து ஒற்றுமை இருப்பது என்பது வேறு. கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு என்பது வேறு. மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைக்காதபோது, பாஜக சார்பில் அதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளேன். மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்களை சந்திப்பதும், பிரதமர், முதல்வரை சந்திப்பதும் ஆரோக்கியமான சூழல். மக்களுக்கு வேண்டிய திட்டங்களை கொண்டுவர இதுபோன்ற சந்திப்புகள் உதவும்.
தமிழக அரசால் ஏதாவது நல்லது நடந்தால் பாராட்டுவோம், மக்களுக்கு நல்லது கிடைக்கவில்லை என்றால் விமர்சனம் செய்வோம். முதல்வரின் உடல் நலம் குறித்த விமர்சனங்கள் வந்தபோது, நான் கருத்து கூற மறுத்துவிட்டேன். எதையும் சரியான கண்ணோட்டத்தில், நாகரீகமான முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அவரது வீட்டுக்கே பிரதமர் சென்று நலம் விசாரித்துள்ளார். முதல்வர் வீட்டுக்கே பிரதமர் போனது, அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு மட்டுமே. இது ஒரு ஆரோக்கியமான சந்திப்பு, அரசியல் சந்திப்பு இல்லை. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications