மோடியின் இலங்கை பயணத்தால் பயனில்லை...: இளங்கோவன்
சென்னை: மோடியின் இலங்கைப் பயணத்தால் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளில், ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று துவங்கும் இந்த பயணத்தின் இறுதி கட்டமாக, வரும், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், இலங்கைக்கு செல்லவுள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் இலங்கைப் பயணம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ‘‘சர்வதேச கடல் எல்லையை தாண்டி எங்கள் கடல்பகுதிக்குள் வந்தால் மீனவர்களை சுடுவோம் அப்படி சுடுவதில் எந்த மனித உரிமை மீறலும் இல்லை. இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
கடந்த காலத்தில் ராஜபக்சேவுக்கு இல்லாத துணிச்சல் இன்று ரனில் விக்கிரமசிங்கேவுக்கு எப்படி வந்தது? இன்னும் ஒரு சில நாள்களில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவை மிரட்டுகிற வகையில், இலங்கை பிரதமர் பேசியதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் இருக்கும்போதே இலங்கை பிரதமர் இப்படி பேசுவதற்கு எங்கேயிருந்து துணிவு வந்தது? 120 கோடி மக்கள் வாழும் நாட்டுக்கு எதிராக, 2 கோடி மக்கள் வாழுகிற இலங்கை நம்மை அச்சுறுத்துகிறதா? மிரட்டிப் பார்க்கிறதா? இதற்கெல்லாம் பா.ஜ.க. என்ன பதில் சொல்லப்போகிறது?
இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படவும், இலங்கையில் வாழ்கிற 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய - இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு கருதியும், பிரதமர் இந்திராவும் சிரிமாவோ பண்டார நாயகாவும் 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் இரு ஒப்பந்தங்கள் கச்சத்தீவு குறித்து நிறைவேற்றினர். அதனடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, சர்வதேச கடல் எல்லைகள் வகுக்கப்பட்டன.
தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நமது மீனவர்கள் தாக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதிலிருந்து தமிழ் மீனவர்களை மீட்டு, வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசின் அராஜக போக்குக்காரணமாக எந்த ஒப்பந்தத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
எனவே, பிரதமர் ராஜிவ் காந்தியும் அதிபர் ஜெயவர்த்தனாவும் 1987இல் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 13வது அரசமைப்புச் சட்டத்திருத்ததின்படி, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், 'இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியும், இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டார நாயகாவும் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம்' என்கிற நிலையை இலங்கை அரசுக்கு இந்திய பிரதமர் கடுமையான முறையில் தெரிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நமது ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்ற மறுக்கிறபோது, அவர்களோடு நாம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதில் எந்த தவறும் இல்லை.
28 ஆண்டுகள் கழித்து, பிரதமர் ராஜிவ்காந்திக்கு பிறகு, முதன்முறையாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை செல்வதினால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. நமது பிரதமர் இலங்கை சென்று தற்போது செய்யவேண்டிய பணிகளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராலேயே செய்ய முடியும். அதுவும், இலங்கை பிரதமரின் ஆணவப்பேச்சுக்கு பிறகு, இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் மங்கிவிட்டது. இச்சூழலில், இந்திய பிரதமர் இலங்கைக்கு செல்வதை ரத்து செய்வதுதான், இலங்கை அரசின் எதேச்சதிகார போக்குக்கு இந்தியா தருகிற சரியான பதிலடியாக இருக்கமுடியும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications