மோடி விரைவில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார்: இல. கணேசன்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்ய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விரைவில் தமிழகம் வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மூத்த தலைவரும், தென்சென்னை வேட்பாளருமான இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸுக்கு சரியாக தேர்தலுக்கு முன்பு ஞானோதயம் பிறந்ததை போன்று ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறைக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏராளமான ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை செய்துள்ளன. மீண்டும் அப்படி செய்ய மக்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும்போது பாஜக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சிக்கவில்லை என்கிறார்கள். இது பிரதமராகப் போவது ராகுலா, மோடியா என்பதை தீர்மானிக்கும் தேர்தல். ஆனால் சிலரோ இது ஜெயலலிதாவா, கருணாநிதியா என்பது போன்று மக்களை திசை திருப்புகிறார்கள். நாங்கள் அவ்வாறு திசை திருப்ப மாட்டோம். பாஜகவுக்கும், மோடி பிரதமர் ஆவதற்கும் ஆதரவாக விஜயகாந்த், வைகோ மற்றும் பாமக தலைவர்கள் பிரச்சாரம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மேலும் ஏ.கே. மூர்த்தியின் பிரச்சாரத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது. எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளதால் இப்படி செய்கிறார்கள்.
மோடி தமிழகத்தில் பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அவர் 2ம் கட்ட பிரச்சாரத்திற்கு வருவார். அவர் வரும் தேதி, பொதுக்கூட்டம் நடக்கும் இடம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
இந்நிலையில் மோடி ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழகத்திற்கு வருவதாக பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications