தெரசா பற்றி சர்ச்சை பேச்சு: மோகன் பகவத்துக்கு சிகிச்சை கொடுக்க சொல்லும் குஷ்பு
சென்னை: ஆர் எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறி உள்ளார்.
அன்னை தெரசா ஏழைகளுக்கு செய்த உதவிக்கு பின்னால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதே முக்கிய நோக்கமாக இருந்தது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள நடிகை குஷ்பு, "நான் ஒரு இஸ்லாமியராக பிறந்து ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளேன். இது ஒரு விஷயமே இல்லை" ''மோகன் பகவத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்" என்று குஷ்பு காட்டமாக கருத்து தெரிவித்து உள்ளார்.
அன்னை தெரசா மிகவும் தூய்மையானவர். அவரது சேவையைப் பற்றி பேசுவதற்கு மோகன் பகவத்திற்கு தகுதியிருப்பதாக தெரியவில்லை என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
குஷ்புவின் கருத்துக்கு அவரது ரசிகர்களும் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மனசுக்குப் பிடிச்சுப் போன மதத்திற்கு வேலையில்லை மேடம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏராளமானோர் குஷ்புவின் கருத்தை ரீடுவிட் செய்துள்ளனர்.