ரூ. 1.10 கோடி அரசுப் பணத்தை ஸ்வாஹா செய்த பஞ்சாயத்துத் தலைவி.. திமுக புகார்
தூத்துக்குடி: அரசுப்பணம் ரூ.1 கோடியே 10 லட்சத்தை மோசடி செய்த அதிமுக பஞ்சாயத்து தலைவி மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுகவினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட திமுக மீனவரணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஸ்பாலன் தனது ஆதரவாளர்களுடன் வந்து இன்று கலெக்டர் ரவிக்குமாரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:
தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த மேரி என்பவர் இருந்து வருகிறார். இந்த பஞ்சாயத்தில் 2011-12, 2012-13ம் நிதியாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் செலவுகளில் அரசுப்பணம் விதிமுறைகளுக்கு புறம்பாக ரூ.ஒரு கோடியே 10லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தாய் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகள், யூனியன் நிதியில் செய்யப்பட்ட பணிகளை எல்லாம் பஞ்சாயத்து நிதியில் செய்ததாக போலியாக கணக்கு காட்டப்பட்டு அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பஞ்சாயத்தில் போடாத சாலைகளை போட்டதாகவும், ஏற்கனவே அமைத்த சாலைகளை புதியதாக அமைத்ததாகவும் கூறி அரசுப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
எனவே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவரும் பஞ்சாயத்து தலைவி மேரி மீது உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும், மோசடி தொடர்பாக விசாரணைக்குழு அமைத்து விசாரித்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவராக அதிமுகவின் மேரி இருந்துவரும் நிலையில், துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த அம்பாசங்கர் என்பவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications