தமிழகத்தில் 24 மணிநேரத்தில் காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, குறைந்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற உள்ளதால்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை நாளை முதல் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதில்
அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ளனர். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளநீர் கடலூரில் வடியத்தொடங்கினாலும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு பல மாதங்கள் ஆகும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை வரை பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளக்காடக மாறியுள்ளது. இருமாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளன.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலகிருஷ்ணன், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல்) மாறும் வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் வட கடலோர மாவட்டங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாளை முதல் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடலோர மாவட்டங்களிலும், வட தமிழகத்திலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி அறிவித்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் 7 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.