மாமியார், மருமகள் சண்டை... 3 பெண் குழந்தைகளுடன் மருமகள் தற்கொலை
சென்னை: சென்னை அருகே ஒரு குடும்பத் தகராறில் தனது மூன்று மகள்களுடன் தாய் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி பலராமன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இடியாப்பம் சுட்டு விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் லட்சுமி. 35 வயதாகும் லட்சுமிக்கு, சங்கீதா, சரண்யா, சபீதா என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு வயது முறையே 14, 12, 9 ஆகும்.
ஜெயராம்ன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மேல் மாடியில் ஜெயராமனின் தாயார் தங்கியிருக்கிறார். கீழ்ப் பகுதியில் ஜெயராமன் தனது குடும்பத்துடன் இருக்கிறார்.
அடிக்கடி மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே சண்டை வருமாம். இருவரும் கடுமையாக சண்டை போட்டுக் கொள்வார்களாம். இதுதொடர்பாக இவர்கள் மீது எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார்கள், வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ஜெயராமன் ஊருக்குப் போயிருந்த நிலையில், லட்சுமியும், அவரது மூன்று மகள்களும் தூக்கில் தொங்கி விட்டனர். இரவு ஜெயராமன் வீடு திரும்பியபோது ஜன்னல் வழியாக இதைப் பார்த்து அதிர்ந்து போனார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அனைவரும் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோது லட்சுமி மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மூன்று மகள்களும் ஏற்கனவே இறந்திருந்தனர். லட்சுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து போனார்.
போலீஸார் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயராமனையும், வள்ளியம்மாளையும் தற்போது பிடித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications