பச்சிளம் குழந்தையை வீட்டிற்குள் புதைத்து விட்டு கடத்தல் நாடகம் ஆடிய தாய்
தாராபுரம்: தாராபுரத்தில், பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வீட்டிற்குள் புதைத்து விட்டு, காணவில்லை என தாயே கடத்தல் நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மனைவி ஷகிலா பேகம். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இத்தம்பதிகளுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்னர் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 15-ந் தேதி மதியம் வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த தன் குழந்தையைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையின் போது, ஷகிலா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் உண்டானது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில் ஷகிலா பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில், குழந்தைக்கு பால் குடிக்கும் போது புரை ஏற்பட்டதாகவும், அதில் மூச்சுத் திணறல் உண்டாகி குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை இறந்த செய்தி அறிந்தால் கணவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி, குழந்தையை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததையும், பின்னர் குழந்தை காணவில்லை என கடத்தல் நாட்கம் ஆடியதையும் ஷகிலா ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து குழந்தையை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார் ஷகிலா.
குழந்தை இறந்து 4 தினங்களுக்கு மேலாகி விட்டதால், அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புரையேறி குழந்தை இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தெரிந்துவிடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.