கள்ளக்காதலுக்குப் பலியான 3 அப்பாவிக் குழந்தைகள். தாயும் தற்கொலை!
3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேலம்: பாழாய்போன கள்ளக்காதல் இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க போகிறதோ? 3 குழந்தைகளை கொன்ற தாய் தானும் தற்கொலை செய்து கொண்ட பயங்கரம் சேலம் அருகே நடந்துள்ளது. கள்ளக்காதல் சட்டமாக்கப்பட்ட மறுதினமே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கொழிஞ்சிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி லட்சுமணன் - ஜெயா. இவர்களுக்கு 7 மற்றும் 3 வயதில் 2 மகள்களும், 11 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். லட்சுமணன் நாமக்கல் அருகே குமாரமங்கலத்தில் ஒரு பேக்டரியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் தினமும் சேலத்திலிருந்து குமாரமங்கலத்துக்கு சென்று வர வேண்டி இருக்கும். ஆனால் வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே எப்பவுமே சண்டை இருந்துள்ளது.
பிணமாக மீட்டனர்
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி ஜெயா மற்றும் 3 குழந்தைகளும் வீட்டில் மாயமானார்கள். எங்கே என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்த லட்சுமணன் கடைசியில் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் போலீசாரும் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று கொழிஞ்சம்பட்டி சாலையில் உள்ள ஒரு கிணற்றில் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் பிணமாக மீட்கப்பட்டனர்.
செல்போன்.. செல்போன்..
இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டபோதுதான் ஒவ்வொரு விஷயமாக வெளியே வந்தது. ஜெயாவுக்கு ஏற்கனவே முகத்தில் வெள்ளை நோய் தாக்கி உள்ளது. அது சமீப காலமாக உடலெங்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெயா விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் ஜெயாவிற்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் எப்ப பார்த்தாலும் செல்போன்.. செல்போன் என்றே கதியாக இருந்திருக்கிறார்.
செல்போன் தர மறுப்பு
அந்த இளைஞருடன் விடிய விடிய பேசியுள்ளார். குழந்தைகளையும் சரிவர கவனிக்கவில்லை. இந்த விஷயத்தை கண்டுபிடித்த லட்சுமணன், ஜெயாவை கண்டித்துள்ளார். அதோடு செல்பேனையும் பிடுங்கி கொண்டு உள்ளார். இதனால் பித்து பிடித்த மாதிரி ஆகிவிட்டார் ஜெயா. அந்த இளைஞரிடம் பேசாமல் ஜெயாவால் இருக்க முடியவில்லை. அதனால் அக்கம் பக்கம் வீட்டிலுள்ளவர்களிடம் சென்று கொஞ்ச நேரம் செல்போன் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விஷயம் தெரிந்துவிட்ட அவர்களும் தங்களது செல்போனை தரமறுத்துள்ளனர்.
என்ன ஆகுமோ?
இதனால் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த ஜெயா பெற்ற குழந்தைகள் 3 பேரையுமே கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அதே கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மேலும் போலீசார், அந்த இளைஞர் யார்? என்பது உள்ளிட்ட விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே நாசமாய் போன கள்ளக்காதல், பல்வேறு குடும்பங்களில் புகுந்து உலகமறியா பச்சிளம் குழந்தைகளை கொன்று எடுத்து வருகிறது. இப்போது சட்டமே இயற்றப்பட்டு விட்டதால் இதன் விளைவு என்ன ஆகுமோ? வருங்கால சந்ததிகளை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ? தெரியவில்லை!