எப்பப் பார்த்தாலும் மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படமுத்தூர் என்ற கிராமத்தில், தனது மகளை எப்போது பார்த்தாலும் அடித்துத் துன்புறுத்தி வந்த மருமகனை சரமாரியாக அடித்துக் கிணற்றில் வீசி விட்டார் ஒரு மாமியார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். 40 வயதான இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீடு போய் விடுவார் சரஸ்வதி. பின்னர் அவரது கணவர் வந்து சமாதானப்படுத்தி மனைவியை கூடடிக் கொண்டு போவார். இது தொடர்கதையாக இருந்து வந்தது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில், கோபித்துக்கொண்டு சரஸ்வதி, ஒசஹள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு முன், மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர, கிருஷ்ணன், ஒசஹள்ளிக்கு சென்றார். ஆனால், சரஸ்வதி வர மறுத்ததால், அவரிடம், கிருஷ்ணன் தகராறு செய்துள்ளார்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த கிருஷ்ணனின் 52 வயதான மாமியார் குள்ளம்மாள், மைத்துனர்கள் வெங்கட்ராமன், சீனன், ஏழுகான் ஆகியோர் சேர்ந்து, கிருஷ்ணனை சரமாரியாக தாக்கி, வீட்டுக்கு அருகே உள்ள வறண்ட கிணற்றில் தூக்கி வீசிவிட்டுப் போய் விட்டனர்.
கிணற்றில் விழுந்து படுகாயமடைந்த கிருஷ்ணன் போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குள்ளம்மாள் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications