சுனாமி நினைவலைகள்: 2004ல் மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாய்
சென்னை: 2004ம் ஆண்டு உண்டான சுனாமி பேரலையில் சிக்கி கணவரை இழந்த பெண் ஒருவர், அப்போது மாயமான தனது 3 மகள்களும் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்.
கடந்த 2004ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி சுமத்திரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக தாக்கியது. இதில் தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன, பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த செண்பகவள்ளி (50)யின் கணவர் கோவிந்தசாமி மற்றும் மகள்கள் குமுதா(17), அனுசியா(16), கவிதா(13) ஆகியோர் கடந்த 2004-ம் ஆண்டு சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு சென்றனர். அங்கிருந்து டிசம்பர் மாதம் 25-ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர்.
அங்கு எதிர்பாராத விதமாக அவர்கள் சுனாமி பேரலையில் சிக்கியுள்ளனர். இதில் மீட்புக் குழுவால் காயங்களுடன் மீட்கப் பட்ட கோவிந்தசாமி, இறக்கும் தருவாயில் தனது மகள்கள் சுனாமியில் சிக்கவில்லை, தப்பித்து விட்டார்கள் என்றத் தகவலை மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
கணவர் சொன்னபடி இன்னும் தனது மகள்கள் மூவரும் உயிரோடு எங்கோ வாழ்ந்து வருவதாக நம்பும் செண்பகவள்ளி, சுனாமி தாக்கி 9 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னமும் தன் மகள்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்.
இதற்காக சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் அதில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து அதில் தனது மகள்கள் இருக்கிறார்களா? என அவர் தேடி வருகிறார்.
இதுபற்றி செண்பகவள்ளியிடம் கேட்கப்பட்டபோது, ‘‘கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் சிக்கிய எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்னிடம் மகள்கள் சாகவில்லை. அவர்களை கண்டுபிடி என்று கூறி விட்டு இறந்து விட்டார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக எனது மகள் 3 பேரையும் தேடி வருகிறேன். அவர்கள் உயிருடன் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எப்படியும் அவர்களை கண்டுபிடித்துவிடுவேன்'' என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
அந்த தாயின் நம்பிக்கை வீண் போகாமல், கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதலாக அவரின் 3 மகள்களையுமாவது அவருடன் சேர்க்க கடவுள் வழி செய்யட்டும் என நாமும் அவருக்காக பிரார்த்தித்துக் கொள்வோம்.












Click it and Unblock the Notifications