வனப்பகுதியில் தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் போட்டுவிட்டு போன தாய்!
நீலகிரி: நீலகிரி வனப்பகுதியில் தொட்டில் கட்டி, அதில், பிறந்த குழந்தையை போட்டுவிட்டு சென்ற தாயை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, ரயில்வே கேட் அருகிலிருந்து குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டது.

அந்த இடத்தில் பேருந்துக்காக நின்ற பொதுமக்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். முட்புதர்களால் மூடியிருந்த ஒரு மரத்தின் கிளையில், சேலை தொட்டிலாக கட்டப்பட்டிருந்தது. அதில், தொப்புள் கொடி காயாத நிலையில் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக 108 மருத்துவ உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, தொட்டிலில் இருந்த குழந்தையை ஆம்புலன்ஸ் உதவியுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சைக்கப்பின், அந்தக்குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தொட்டில் கட்டி குழந்தையை போட்டுவிட்டு சென்றது யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications