அவசரத்தில் மகனை தவற விட்ட தாய்.. அபாய சங்கிலியை இழுக்கும் முன்பே நின்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரயிலில் ஏறிய அவசரத்தில் தாய், தனது 8 வயது மகனை தவறவிட்டார். மகன் பிளாட்பாரத்தில் அழுது கொண்டிருந்த நிலையில், வேகமாக அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயன்றார். அப்போது திடீரென தானாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றது
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த ரயில் நடுவழிலை லோகோ பைட் சரியான நேரத்தில் கண்டுபிடித்து நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பிரச்சனையை சரி செய்த பின்னர் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு மாலை 6.10-க்கு வந்தடைந்தது.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு சுமார் 20 மீட்டர் தூரம் சென்ற போது ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் இருந்து கம்பிகள் உரசும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே இதனை கவனித்த ரயிலின் லோகோ பைலைட் (டிரைவர்) சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தினார். இதனால் நடுவழியில் ரயில் நின்றது.
பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி ரயில் சக்கரம் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது என்ஜினில் உள்ள சக்கரத்தில் இணைக்கப்பட்டிருந்த ஸ்பிரிங் சேதமடைந்திருந்தது. இதனால் தான் சத்தம் கேட்டது என்பதை அறிந்த டிரைவர் இதுபற்றி நாகர்கோவில் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் விரைந்தனர். அங்கு பழுது ஏற்பட்ட ஸ்பிரிங்கை ஊழியர்கள் சரி செய்தார்கள். அதன்பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் ஸ்பிரிங் பழுதானதை டிரைவர் கவனித்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இது ஒருபுறம் எனில், மதுரையைச் சேர்ந்த ரேவதி என்பவர் தனது 8 வயது மகனுடன் நாகர்கோவிலில் இருந்து நேற்று மதுரை செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். ரேவதியும் அவரது 8 வயது மகனும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக நாகர்கோவில் ரயில்நிலையத்தில் காத்திருந்தனர். ரயில்வந்ததும், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், கூட்ட நெரிசலில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். அந்த சமயத்தில் முதலில் உடமைகளை எடுத்து கொண்டு ரேவதி ரயிலில் ஏறிவிட்டார்.
ஆனால் இதனை கவனிக்காத 8 வயது மகன் ரயில்நிலைய நடைமேடையிலேயே நின்று கொண்டு தாயை தேடியதோடு கதறி அழுதான். இதற்கிடையே ரயில் புறப்பட்ட பின்னர், ரேவதி தனது மகன் எங்கே? என தேடினார். நடைமேடையில் மகன் நின்று அழுததை கவனித்தார். ஆனால் அவரால் ரயிலில் இருந்து இறங்க முடியவில்லை. பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க முயன்றார். ஆனால் அதற்குள் தானாகவே பழுது காரணமாக ரயில் நின்று விட்டது. ரயில்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் நின்றதால், உடனே ரேவதி ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடி சென்று மகனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் ரயிலுக்குள் மகனை அழைத்து வந்தார்.












Click it and Unblock the Notifications