தினகரன் நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது... எம்.பி. அருண்மொழிதேவன் அறிவுரை
தினகரன் நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது என்று எம்.பி. அருண்மொழிதேவன் தெரிவித்தார்.
கடலூர்: மனதில் தோன்றியவற்றை எல்லாம் செய்து வரும் தினகரன் நல்ல மன நல மருத்துவரை சந்திப்பது நல்லது என்று எம்.பி அருண்மொழிதேவன் அறிவுறுத்தியுள்ளார்.
தினகரன் தினமும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் விருத்தாசலம் எம்எல்ஏ கலைசெல்வன் நேற்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட எம்எல்ஏ-க்கள், எம்பி.க்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எம்பி அருண்மொழிதேவன் கூறுகையில், ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் டிடிவி தினகரன்.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்குவதற்கு இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது குழப்பத்தை ஏற்படுத்தவே மூத்த நிர்வாகிகளை டிடிவி தினகரன் நியமித்து வருகிறார்.
அவரே உறுப்பினர் இல்லாத நிலையில் நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. அவர் தனியாக கட்சி ஆரம்பித்து இதுபோல் நடவடிக்கைகளை செய்யட்டும்.
ஜெயலலிதா மறைந்த போது இருந்த சூழ்நிலையில் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தோம். ஆனால் அவர் எப்போது ஜெயலலிதா போல் பொட்டு வைப்பது, கொண்டை போடுவது, அவரது காரை பயன்படுத்துவது ஆகியவற்றை பார்த்தோமோ அப்போதே அவரது சுயரூபத்தை புரிந்து கொண்டோம்.
எனவே நாங்கள்தான் சசிகலாவை நியமித்தோம் என்று முடிந்து போனதை பேசி பயனில்லை. டிடிவி தினகரன் நானே ராஜா நானே மந்திரி என்பது போல் செயல்படுகிறார். அவர் நல்ல மன நல மருத்துவரை சந்திப்பது நல்லது.
விரைவில் தினகரனிடம் உள்ள 21 எம்எல்ஏ-க்களும் எங்கள் பக்கம் வருவர். நாங்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளோம். தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று திவாகரன் கூறுவதன் மூலம் எதை கவர வருகிறார் என்பது தெரிகிறது. ஜெயலலிதா இருந்த வரை ஜாதி, மதம், பேதம் என யாரையும் பார்த்ததில்லை. அனைவரும் சமமாகவே பாவிக்கப்பட்டோம். மேலும் உறுப்பினரல்லாத திவாகரன் இதுபோன்று பேசுவது ஏன் என்றார் அருண்மொழிதேவன்.












Click it and Unblock the Notifications