மிஸ்டர் கருணாநிதி, இந்த நடிப்பை நாங்க வசந்த மாளிகையிலேயே பார்த்துட்டோம்: நடிகை விந்தியா
நாமக்கல்: இது தான் என்னுடைய கடைசி தேர்தல் என கருணாநிதி அழுகிறார். இந்த நடிப்பை எல்லாம் நாங்கள் வசந்த மாளிகையிலேயே பார்த்துவிட்டோம் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் கே.பி.பி. பாஸ்கர் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஸ்கரை ஆதரித்து நடிகை விந்தியா நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கருணாநிதி
இந்த தேர்தல் மக்கள் மனதை கொள்ளையடித்த ஜெயலலிதாவுக்கும், மக்களின் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். திரைப்படத் துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமான கருணாநிதி தற்போது நடிகராக ஆகியுள்ளார்.
அழுகை
இது தான் என்னுடைய கடைசி தேர்தல் என கருணாநிதி அழுகிறார். இந்த நடிப்பை எல்லாம் நாங்கள் வசந்த மாளிகையிலேயே பார்த்துவிட்டோம். வெற்று அறிக்கையை வட்டு மக்களை ஏமாற்ற முயல்கிறார் கருணாநிதி. இவர்கள் தமிழ் இன துரோகிகள். பாவ மன்னிப்பு கேட்கும் தகுதி கூட கருணாநிதிக்கும், அவரது குடும்பத்திற்கும் கிடையாது.
திமுக-காங். கூட்டணி
திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்ளையடிப்பதற்காக சேர்ந்துள்ள ஊழல் கூட்டணி ஆகும். ஆங்கிலேயர்களை ஒழிக்கத் துவங்கிய காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களை ஒழித்துவிட்டு அடுத்து இரட்டை இலையை ஒழிப்பதாக கூறுகிறது. இரட்டை இலை வெறும் சின்னம் இல்லை அது மக்களின் எண்ணம்.
வெற்றி
இந்த தேர்தலில் நமக்கு கிடைக்கப் போவது சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றி. 6 இல்லை 1000 பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. 6 பேர் உள்ள கூட்டணி சக்கரம் இல்லாத வாகனத்தை போன்று உள்ளது.
வீட்டு மக்கள்
திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் நாட்டு மக்களுக்கானது அல்ல மாறாக வீட்டு மக்களுக்கானது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்கிறார்களே. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. இது திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டும் தேர்தல்.