முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க கருணாநிதி வலியுறுத்தல்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி விவசாயிகளின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்கக்கோரி, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாக, கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார்.

தமிழகத்துக்கு நல்ல வாய்ப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நல்ல வாய்ப்பு தமிழக அரசுக்கு கிட்டியுள்ளது.

138 அடியை எட்டியது
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகவே முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டமானது, விரைவாக உயர்ந்து வருகிறது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போதுதான் அணையின் நீர் மட்டம், 5-11-2014 நிலவரப்படி 138 அடியை எட்டியுள்ளது.

கேரளா கோரிக்கை நிராகரிப்பு
அணையின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால், அணைப் பகுதியிலே உள்ள மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த மக்களின் பாதுகாப்பை கருதி, நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்றும் கேரள அதிகாரிகள் உச்சநீதிமன்றக் குழுவிடம் கோரினார்கள். ஆனால் கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றக் குழு ஏற்கவில்லை.

மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு
எனவே 5-11-2014 அன்று திருவனந்தபுரத்தில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்பின் தலைமையில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டம் முடிந்த பிறகு தான், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 138.10 அடியைத் தாண்டியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளார்கள். எனவே நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். 11-ந் தேதிக்குள் விசாரணை தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலே கேட்கவிருக்கிறோம்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

142 அடியாக தேக்க வேண்டும்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக செய்திவந்துள்ளது. எனவே நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் நமக்கு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி நீரைத் தேக்குவதற்கான வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான தக்க நேரம் கனிந்துள்ளது.

பொதுமக்களுக்கு சந்தேகம்
ஆனால் 5-11-2014 வரை 456 கன அடி நீரைக் குடிநீருக்காக வெளியேற்றி வந்ததற்கு மாறாக, அந்த அளவை அதிகப்படுத்தி 6-11-2014 அன்று 1,816 கன அடி நீரை உடனடியாக வெளியேற்றுவதன் காரணம் என்ன?. நீர்வரத்து 1973 கன அடியாக இருக்கின்ற நேரத்தில் தண்ணீரை அதிகப்படியாக வெளியேற்றுவது, இந்த அரசுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விருப்பமில்லையோ என்று அந்த பகுதியிலே வாழும் விவசாயிகள் மற்றும் அங்கேயுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எண்ணுகிறார்களாம்.

இழக்க நேரிடும்
குறிப்பாக அந்தப் பகுதியிலே உள்ள தமிழக விவசாயிகள், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள, ஆக்கிரமிப்பு கட்டிடங்களைப் பாதுகாக்கவே உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடரும் நாடகத்தை அரங்கேற்றுகிறது, இதில் வேறு எந்த மர்மமும் இல்லை" என்று கூறியுள்ளனர். மிக முக்கியமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தொடர்பான இந்த பிரச்சினை பற்றி அ.தி.மு.க. அரசின் சார்பில் எவ்வித விளக்கமும் இதுவரை வரவில்லை. தொடர் மழை காரணமாக எல்லா குளங்களும் நிரம்பி, எல்லா நிலங்களிலும் ஈரப்பதம் மிகுந்துள்ள நேரத்தில், தேவையில்லாமல் அணையில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றுவதன் மூலம், 142 அடிவரை நீரைத் தேக்கும் வாய்ப்பினைத் தமிழகம் இழக்க நேரிடும் நிலை உள்ளது.

விவசாயிகளின் விருப்பம்
எனவே உடனடியாக குடிநீர்த் தேவைக்காக மட்டும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அணையை வந்தடைகின்ற நீரை முழுவதுமாக சேமித்து, தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கின் மீது உச்சநீதிமன்றம் இறுதியாக அளித்த தீர்ப்பினை நிலைநாட்டி விவசாயிகளின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றிடத் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications