கேரளா வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணை காரணமில்லை.. எடப்பாடி பழனிச்சாமி பொளேர்!
முல்லைப் பெரியாறு அணையினால் கேரளாவில் வெள்ளம் ஏற்படவில்லை, கேரளாவில் அதிக அளவில் பெய்த மழையே வெள்ளத்திற்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: முல்லைப் பெரியாறு அணையினால் கேரளாவில் வெள்ளம் ஏற்படவில்லை, கேரளாவில் அதிக அளவில் பெய்த மழையே வெள்ளத்திற்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேரளாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 139 அடியாக குறைக்க வேண்டும் என்று துணை கண்காணிப்பு குழு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கு குறித்த நேற்று நடந்த உச்ச நீதிமன்ற விவாதத்தில், கேரளா அரசு தமிழகத்தின் மீது பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டதால் கேரளாவில் வெள்ளம் வந்தது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. கேரளா அரசு சார்பில் வைக்கப்பட்ட இந்த விவாதத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் காரணமாக இடுக்கி அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளனர்.
இது பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. மீண்டும் முல்லைப்பெரியாறு பிரச்சனை இதனால் உருவாகி உள்ளது. இந்த நிலையில் கேரளா அரசின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், முல்லைப் பெரியாறு அணையைத் திறந்ததால் கேரளாவில் வெள்ளம் வரவில்லை. கேரள அரசின் குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட நியாயம் கிடையாது. கேரள அரசு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது. அதில் எந்த விதமான விரிசலும் இல்லை. கேரளா வெள்ளத்திற்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
கேரளா முழுவதும் வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்ததால்தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அவர்கள் அணைகளில் அதிக அளவு தண்ணீரை தேக்கி வைத்து இருந்தனர். இதுதான் வெள்ளத்திற்கு காரணம், என்று கூறியுள்ளார்.