3 பவுன் செயினை விழுங்கிய திருடனுக்கு 48 வாழைப்பழங்கள் கொடுத்து வெளிய வரவழைத்த போலீஸ்
மும்பை: மும்பையில் திருடிய தங்க செயினை விழுங்கிய திருடனுக்கு போலீசார் 48 வாழைப்பழம் கொடுத்து அதை வெளியே வரவழைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாதாலா பகுதியைச் சேர்ந்தவர் கோபி ஆர். கவாரே(25). அவர் கடந்த புதன்கிழமை இரவு கட்கோபர் மீன் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் மீன் வாங்க வந்திருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

என் செயின், என் செயின் என்று அந்த பெண் போட்ட சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று கோபியை பிடித்தனர். ஆனால் அவர் செயினை விழுங்கிவிட்டார். இதையடுத்து அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் கோபியை பிடித்து பான்ட் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பொதுமக்கள் அடித்ததில் காயம் அடைந்த கோபியை ராஜாவாடி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றில் செயின் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோபிக்கு 48 வாழைப்பழங்கள் கொடுத்து அவரை சாப்பிட வைத்தனர்.
வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அவர் கழிவறைக்கு சென்றார். அவருடன் நான்கு போலீசார் கழிவறைக்கு சென்று அவர் இயற்கை உபாதை கழிப்பதை வீடியோ எடுத்தனர். அப்போது கோபி விழுங்கிய செயின் வெளியே வந்தது.
நகையை விழுங்கிய திருடர்களுக்கு மும்பை போலீசார் வாழைப்பழம் கொடுத்து சாப்பிட வைப்பது வழக்கமான ஒன்று தான்.












Click it and Unblock the Notifications