நெல்லையில் குடிநீர் கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் 25 நாட்களுக்கு ஓருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர் நகராட்சியில் சுமார் 10,00,00 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருப்பாநதி குடிநீர் திட்டத்தின் கீழ் 35,00,000 லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் 35,00,000 லட்சம் லிட்டர் தண்ணீரும் ஓரு நாள் விட்டு ஓருநாள் விநியோகம் செய்யப்பட்டது.
இதனிடையே கடந்த திமுக ஆட்சியில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு பல கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதை கிடப்பில் போட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடைய நகரின் முக்கிய இடங்களில் 2650 குடிநீர் இணைப்புகளில் குடிநீர் வழங்குவதற்கான வெள்ளோட்ட நடவடிக்கையை குடிநீர் வடிகால் வாரியம் எடுத்தது. இதற்கான பணிகளை செய்ய வந்த சில துணை ஓப்பந்ததாரர்கள் சட்டவிரோதமாக 600 வீடுகளில் தலா ரூ.9,000 வசூலித்து இணைப்பு வழங்கியதாகவும், இந்த இணைப்புகள் வழக்கமான வரும் தண்ணீர் குழாய்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் நகராட்சியில் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினருடன் இணைந்து நேற்று மாலையில் திடீரென காலி குடங்களுடன் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நகராட்சி அலுவலக்ததில் திரண்ட பொதுமக்கள் காலி மண்பானைகளை ரோட்டில் போட்டு உடைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.