பிரேமா செத்துப் போய்ருச்சுப்பா..!
சென்னை: "சீரியல் கில்லர்"களில் ஒருவரான "பிரேமா" கட்டக் கடைசியாக செத்துப் போய் விட்டார்.. அதுவும் தீயில் குதித்து!
தினசரி சாயந்திரம் 6 மணிக்கு வீடுகளில் விளக்கு வச்சதும், வந்து விழும் முதல் வார்த்தையே உன்னை அழிக்காம விட மாட்டேன். உன் குடும்பத்தையே கருவறுப்பேன்.. கொல்லாம விட மாட்டேன் என்ற 'நல்ல' வார்த்தைகள்தான்.. அதுவும் அழகான பெண்ணின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளும் கூட.
அப்படிப்பட்ட பிரேமா இப்போது செத்துப் போய் விட்டார். கூடவே அந்த சீரியலும் முடிந்து போய் விட்டது.. முந்தானை முடிச்சு சீரியலைப் பற்றித்தான் இந்த செய்தி.
கடந்த பல வருடங்களாக மாலை 6 மணியிலிருந்து 6.30 மணி வரை மக்களை மிட்டி வந்தவர் பிரேமா கேரக்டரில் நடித்த ராணி. சின்னத்திரை வில்லிகளில் இப்போது ராணிக்குத்தான் செம மவுசு. எல்லா சீரியலிலும் ஒரே மாதிரியான வசனம், வார்த்தை உச்சரிப்பு, முறைப்பு, விரல் சொடுக்கு, சேலைக் கட்டு என்று இருந்தாலும் கூட ராணியை வில்லியாக்க கடும் போட்டா போட்டியே நிலவுகிறது.
அவரும் வள்ளி, முந்தானை முடிச்சு என்று கலக்கிக் கொண்டுதான் இருக்கிறார். இதில் முந்தானை முடிச்சு சீரியலை முடித்து விட்டார்கள்.. அதுவும் ஒரு தீக்குளியலோடு.
கடைசி நாள் எபிசோடில் பிரேமா கேரக்டர் திருந்துவது போல சீன் வைத்து சின்னக் கவுண்டர் படத்தின் கடைசி சீனை உல்டா செய்து கலக்கி விட்டார்கள். சின்னக் கவுண்டரிலும் இப்படித்தான் விஜயகாந்த்தின் மச்சான்.. அதாவது வில்லன் மனம் திருந்தி, மனோரமாவிடம் ஆத்தா என்னை மன்னிச்சுரு ஆத்தா என்று கெஞ்சுவார். ஊர்க்காரர்களிடம் விழுந்து விழுந்து கெஞ்சுவார். எனக்கு தண்டனை கொடுங்க என்று கெஞ்சிக் கேட்பார். ஆனால் யாருமே கொடுக்க மாட்டார்கள்.
அதேபோல கடைசியில் பிரேமாவையும் கெஞ்ச விட்டு விட்டார்கள். ஆனால் யாருமே அவரை தண்டிக்க மாட்டார்கள். கடைசியில் நானே என்னைத் தண்டித்துக் கொள்கிறேன் என்று கூறி கோவில் பூக்குழியில் குதித்து செத்துப் போய் விடுவார். அவ்வளவுதான், சீரியல் முடிந்து விட்டது.
அடுத்து புது சீரியல் வருகிறது.. அதன் பெயர்..கேளடி கண்மணியாம்.. என்னென்ன சோதனைகளோ.. எத்தனை எத்தனை வருடங்களோ..!