முரசொலியில் வைகோ- ஸ்டாலின் சந்திப்பு வந்திருக்கு... ஆனால் யார் கண்ணிலும் படாத அளவுக்கு குட்டியாக!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குடும்பத் திருமண விழாவில் சந்தித்துக் கொண்டதை அன்றைய தினம் வெளியிடாத திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலி, அடுத்த நாள் தம்மாத்தூண்டு சைஸுக்குப் போட்டுள்ளது.
அடுத்த நாள் முரசொலியில், 7வது பக்கத்தில் சின்னதாக கீழே போட்டுள்ளனர் போட்டோவை. அதாவது முக்கியத்துவம் இல்லாத வகையில் போட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன்- பேத்தி திருமணம் சமீபத்தில் நடந்தது. அதில் திமுக, மதிமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜகவினரும் கூட கலந்து கொண்டனர் என்றாலும் வைகோ, ஸ்டாலின் சந்திப்பும், கருணாநிதியின் பேச்சும்தான் ஹைலைட்டாக மாறிப் போயிருந்தது.
இதை வைத்து மீண்டும் திமுக, மதிமுக, பாமக ஆகியவை கூட்டணி அமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் கூட்டணி குறித்து சிந்திக்கவே இல்லை என்று அடுத்த 2 நாட்களில் வைகோ கூறி விட்டார். டாக்டர் ராமதாஸும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று மறுத்து விட்டார்.
இதுதொடர்பாக திமுக தரப்பிலிருந்து எந்தப் பேச்சும் இதுவரை இல்லை. இந்த நிலையில் வைகோவை, திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் தேடிப் போய்ச் சந்தித்தது தொடர்பான செய்தி, புகைப்படம், பேட்டி என எதுவுமே அன்றையதினம் வெளியான முரசொலியில் இடம் பெறவில்லை. இது சலசலப்பைக் கிளப்பியது.
ஆனால் அடுத்த நாள் போட்டோ போட்டுள்ளனர்.அதேசமயம் முக்கியத்துவம் இல்லாத வகையில் 7வது பக்கத்தில் கீழே போட்டுள்ளனர். யாரும் உடனே கண்டுபிடித்து விடாதபடி.
முன்பு திமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டு வைத்திருந்த மு.க.அழகிரி, வைகோவைச் சந்தித்துப் பேசினார் என்பதால்தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எனவே மு.க.ஸ்டாலின், வைகோவைச் சந்தித்ததை வைத்து அழகிரி தரப்பு பிரச்சினை கிளப்பி விடக் கூடாது என்பதற்கா்கவே இந்த அடக்கம் ஒடுக்கமான செய்திப் பிரசுரம் என்று கூறுகிறார்கள்.