யுவராஜுக்கு ஜாமீன்.. நெல்லையில் தங்கி கையெழுத்துப் போட ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: தலித் இளைஞர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான யுவராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர், தீரன் சின்னமலை பேரவை என்ற ஜாதி அமைப்பின் தலைவர் யுவராஜ். இவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் என்பவரை கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குப் பின்னர் பல மாதங்கள் தலைமறைவாக இருந்து வந்தார் யுவராஜ். அதேசமயம், அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை ரொம்பவே கேலிக்கூத்தாக்கினார்.

இந்த நிலையில் தான் சரணடையப் போவதாக திடீரென அவர் அறிவித்தார். சொன்னபடி காவல் நிலையத்தில் வந்து சரணும் அடைந்தார். ஆனால் ஆயிரக்கணக்கானோர் புடை சூழ அவர் சரணடைய வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அவர் வாட்ஸ் ஆப் மூலம் செய்தி அனுப்பியது பலரையும் அதிர்ச்சியுற வைத்தது. இந்த நிலையில் இந்த யுவராஜுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜாமீனில் வந்து விட்டனர். இதைச் சுட்டிக் காட்டியும், 100 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை சுட்டிக் காட்டியும் யுவராஜ் சார்பில் ஜாமீன் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி நெல்லையில் தங்கி அங்கு தினமும் காலை, மாலை காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications