தவறான தகவலை பரப்புவதா? பொன்.ராதாகிருஷ்ணனா, பொய்.ராதாகிருஷ்ணனா?: முத்தரசன் கேள்வி
தவறான தகவல்களை பொன்.ராதாகிருஷ்ணன் பரப்பி வருவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக மக்களிடம் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணா? பொய்.ராதாகிருஷ்ணா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளதாக முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். அதனை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 29-ம் தேதி மாநில துணை செயலாளர் சுப்பராயன் தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
நாங்களும் சமூகவிரோதிகளே
சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவையற்றது. வளர்ச்சி என தமிழக அரசு கூறுவது ஏற்புடையதல்ல. திட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என முதல்வர் அடம் பிடிக்கிறார். பியூஸ் மனுஷ், வளர்மதி உள்ளிட்டோரை கைது செய்தது கண்டத்துக்குரியது. கருத்து கூறினாலே சமூக விரோதிகள் என கூறினால் நாங்களும் சமூக விரோதிகளே. மாநில அரசின் எட்டு வழி சாலையை கண்டித்து ஜூலை 4-ம் தேதி சேலத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
7 பேர் விடுவிக்க வேண்டும்
தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி வரும் நிலையில் கைது நடவடிக்கை மூலம் அரசு பதற்றத்தை உருவாக்கி வருகிறது. ஆளுநர் மூலமாக மத்திய அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு அடக்குமுறைகள் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஆதரவாகவே மாநில அரசு செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். அதுவும் மத்திய அரசு கையில் உள்ளது.
கடிவாள் இல்லாத குதிரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் இன்னும் பதவி விலகவில்லை என தெரியவில்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக, கடிவாள் இல்லாத குதிரை போன்று ஆகிவிட்டது. அமைச்சர்கள் தங்களது வாய் வந்ததை அனைத்தும் பேசி வருகின்றனர். காவிரி வேளாண்மை வாரியத்தை அமைத்தே விட்டதாக சாதனை கூட்டத்தை அதிமுகவினர் நடத்தி வருவது கேலி கூத்து.
பொய்.ராதாகிருஷ்ணனா?
தமிழகத்தில் நக்சலைட், மாவோயிஸ்ட் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி கூறி வருகின்றார். உளவுத்துறை பார்க்கும் வேலையை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்க்கின்றார். பொன்.ராதா கிருஷ்ணனா? பொய்.ராதா கிருஷ்ணனா ? என்ற கேள்வி மக்களிடம் இருக்கின்றது. போகின்றபோக்கில் நக்சல், மாவோயிஸ்ட் என்றெல்லாம் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லிவிட்டு போக கூடாது. யார் அவர்கள் என்பது குறித்த பட்டியலை பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்க வேண்டும்.