மக்கள் விருப்பப்படி ஓபிஎஸ்க்கு ஆதரவு: மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் அதிரடி அறிவிப்பு
சென்னை: தொகுதி மக்களின் விருப்பப்படி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருவதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நடராஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையிலான கோஷ்டியின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவர் உட்பட இதுவரை 10 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். இரு அணிகளிலும் இணையாமல் இருந்துவந்தார் முன்னாள் போலீஸ் அதிகாரியான மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ்.
இரு அணிகளிலும் இணயாத நடராஜையே முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று சட்டசபையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என நடராஜ் அறிவித்திருந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடராஜ், இரு அணிகளும் சமரசமாக போக வேண்டும் என முயற்சித்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதை நான் விரும்பவில்லை. என் தொகுதி மக்களின் விருப்பப்படியே செயல்படுவேன்; அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், தொகுதி மக்களின் உணர்வை மதிக்கிறீர்கள் எனில் நீங்கள் ஓபிஎஸ் அணியை ஆதரிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடராஜ், ஆம் நான் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கிறேன் என அதிரடியாக அறிவித்தார். இதனால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கான ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications