மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா: மாட வீதியில் ஆடி அசைந்து வலம் வந்த தேர்கள்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Recommended Video

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த 5 தேர்களையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சைவ கோவில்களில் பிரசித்தி பெற்று விளங்கும் கபாலீஸ்வரர் கோவில், சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 21ஆம் தேதி கிராம தேவதை பூஜையுடன் தொடங்கியது. 22ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.

தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. காலை 6 மணிக்கு அமைச்சர்களும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

முதலில் விநாயகர் தேர் சென்றது. இதனையடுத்து கபாலீஸ்வரர் திருத்தேர் சென்றது. பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த கற்பகாம்பாள் தேர், முருகன் தேர், ஆஞ்சநேயர் தேர் என 5 தேர்கள் வரிசையாக மாட வீதிகளில் ஆடி அசைந்து சென்றன. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கபாலீஸ்வரர், 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா நாளை நடக்கிறது. சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது. பங்குனி உத்திர தினத்தன்று கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications