திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம்: சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரண வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா, தலித் இளைஞர் கோகுல்ராஜின் கொலை வழக்கை விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது தோழியும், கீழக்கரையில் டிஎஸ்பியாக பணிபுரியும் மகேஸ்வரியும் கூறினார்.
மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய விஷ்ணு பிரியாவின் பெற்றோர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அதேபோல தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி விசாரணை
விஷ்ணுபிரியாவிடம் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள், அவரது தோழிகள் மற்றும் போலீசார் சிலரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அவரிடம் அடிக்கடி பேசிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் மாளவியா, திருக்கோஷ்டியூர் கோவில் அர்ச்சகர் விஜயராகவன் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
தற்கொலை வழக்கின் விசாரணை திசைமாறுவதை அறிந்த அவரது தந்தை ரவி, தனது மகள் விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ரவி தனது மனுவில், எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் இறந்திருக்கிறார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
கண்துடைப்பு விசாரணை
தங்களது துறையைச் சார்ந்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்குடன் சிபிசிஐடி போலீசார் ஒருதலைபட்சமாக, சார்புத் தன்மையுடன் விசாரணை செய்து வருகின்றனர். எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி.யின் தலையீடு இருப்பதால் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறதா அல்லது வெறும் கண்துடைப்பா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. போலீசார் சாட்சிகளை மிரட்டுவதாகவும் ரவி குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றம் ஆணை
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். 3 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
தந்தை நன்றி
விஷ்ணுபிரியாவின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு அவரது தந்தை ரவி, நன்றி கூறியுள்ளார். மகளின் மரண வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் ரவி தெரிவித்துள்ளார். விஷ்ணுப்பிரியாவின் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து அவரது மரணத்திற்கு காரணமாக குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.