பேய் கதை மாதிரியிருக்கே... கொடநாடு மர்மங்கள் பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல்
மர்மங்கள் நிறைந்த பேய் கதை படிக்கிற மாதிரி இருக்கிறது என்று கொடநாடு பங்களா கொலை, கொள்ளை தொடர்பாக பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.
திருச்சி : கொடநாடு சம்பவங்கள் மர்மங்கள் நிறைந்த பேய் கதைபோல் உள்ளது. காவலாளி, டிரைவர் கொலை, தாக்கப்படுவது என பல மர்மங்கள் நிறைந்துள்ளன என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி மர்மங்களை வெளி கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என்றார்.

டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி தலைமையிலான அரசு பொய்வழக்கு பதிவு செய்து பெண்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.
தமிழக அரசின் பதவி காலம் 4 வருடம் இருப்பதால் இன்னும் கொள்ளை அடிக்கத்தான் முயற்சிக்கின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த பட்டியலில் முதல்வர் எடப்பாடி பெயர் உள்பட 6 அமைச்சர்கள் பெயர் இருந்தும் இதுவரை விசாரணை இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையர் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கொடநாடு சம்பவங்கள் பேய் கதைபோல் உள்ளது. காவலாளி, டிரைவர் கொலை, தாக்கப்படுவது என பல மர்மங்கள் நிறைந்துள்ளன. போலீசார் விசாரணை நடத்தி மர்மங்களை வெளி கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக புறவாசல் வழியாக வரும் என்று எல்லோருக்கும் தெரியும். குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications