கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் மரணத்தில் ஏன் குற்றவாளி கைது இல்லை... சீமான் கேள்வி!
சாதி,மத ஒடுக்குமுறையால் தற்கொலை செய்து கொண்ட கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷின் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் கூறினார்.
Recommended Video
வேலூர் : சென்னை, எழும்பூரில் உள்ள கவின் கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் சாதி, மத ஒடுக்குமுறைகளால் தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதமாகியும் குற்றவாளி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 25-10-2017 அன்று சென்னை எழும்பூர் கவின் கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்திருந்ததோடு, வீடியோ பதிவாகவும் பிரகாஷ் வெளியிட்டிருந்தது அவரது மரணத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
தனது துறைத்தலைவர் ரவிக்குமார் சாதி, மத கண்ணோட்டத்துடன் தன்னை அணுகியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாக பிரகாஷ் கூறி இருந்தார். ஆனால் இந்த வழக்கல் ஒரு மாதமாகியும் விசாரணை நடத்தப்படாததோடு குற்றவாளியும் கைது செய்யப்படாததற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரகாஷ் பெற்றோருடன் சந்திப்பு
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை எனும் சிற்றூரில் உள்ள மாணவர் பிரகாசின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பிரகாஷின் பெற்றோருக்கு சீமான் அப்போது ஆறுதல் கூறினார்.
|
சாதி, மத கண்ணோட்டம்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பிரகாஷ், அளப்பெரிய திறமையும், தன்னிரகற்ற உழைப்பையும் கொண்டிருந்ததன் விளைவாக முதல் இரு ஆண்டுகள் சிறந்த மாணவனுக்காகக் கல்லூரியின் விருதையும் பெற்றிருக்கிறார். ஆனால் பிரகாஷை அவரது துறைத்தலைவர் ரவிக்குமார் சாதி, மதக்கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கிறார்.
துறைத் தலைவர் மீது நடவடிக்கை இல்லை
திட்டமிட்டுப் புறக்கணித்தல், வாய்ப்புகளை மறுத்தல், மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுப் பிரகாஷை கல்விக் கற்கவிடாது பெரும் இடையூறு செய்திருக்கிறார். இதுகுறித்துக் கல்லூரியின் முதல்வர் சிவராசுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் துறைத்தலைவர் மீது மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, துறைத்தலைவரின் செயலுக்கு முதல்வரும் துணைபோயிருக்கிறார்.
பிரகாஷ் தற்கொலை
இதனால், தனது கல்வியைத் தொடர முடியாமல் போகிறதே என்கிற வேதனையில் மனமுடைந்து போன பிரகாசு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்றும் கல்விக்கூடங்களே கொலைக்களமாகி மாணவர்களைக் கொலைசெய்கிறது என்பது கல்வி முறையிலுள்ள நிர்வாகச் சீர்கேட்டினையும், பேராபத்தினையும் எடுத்துரைக்கிறது. மேலும், பாடத்திட்டத்தில் மட்டுமல்லாது பயிற்று முறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவை என்பதைத் தெளிவாய் உணர்த்துகிறது.
நீதி விசாரணை இல்லை
பிரகாஷ் மரணமடைந்து ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அதுகுறித்தான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாதிருப்பதும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குச் சாதகமாக வழக்கின் போக்கை மாற்ற முனைவதும் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. பிரகாஷின் மரணத்தை வெறுமனே தற்கொலை என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. இது சாதிய வன்மத்தோடும், மதவெறிப்போக்கோடும் கல்லூரி நிர்வாகத்தால் நிகழ்த்தப்பட்டப் பச்சைப்படுகொலை.
இழப்பீடு வேண்டும்
எனவே, பிரகாஷின் மரணத்தை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாகக் கொலைவழக்காகப் பதிவு செய்து இதற்குக் காரணமான துறைத்தலைவர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் சிவராஜ் உள்ளிட்டோரைக் கைதுசெய்ய வேண்டும். கவின் கல்லூரியில் இருக்கும் பிரகாஷ் செய்த சிலைகளை அவர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், பிரகாசின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இல்லாவிடில் பிரகாஷிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என அரசுக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.