நீண்ட இழுபறிக்குப் பின்... விக்னேஷ் உடலை நாம் தமிழர் அலுவலம் கொண்டு செல்ல போலீஸ் அனுமதி #vignesh
சென்னை: நாம் தமிழர் பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக இன்று இரவு வரை வைக்கப்படுகிறது. நாளை அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் 'காவிரி உரிமை மீட்பு பேரணி' என்ற பெயரில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை மன்னார்குடி கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது திடீரென ஆம்புலன்ஸ் முன்பு குவிந்த நாம் தமிழர் கட்சியினர், விக்னேஷ் உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கு முன் சென்னையில் தங்களது கட்சி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கி விக்னேஷ் உடலைக் கைப்பற்ற நாம் தமிழர் கட்சியினர் முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் போலீசாரிடையே வாக்குவாதம் உண்டானது.
இந்த சம்பவங்களால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின், விக்னேஷ் உடலை நாம் தமிழர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல போலீசார் சம்மதித்தனர்.
அதனைத் தொடர்ந்து உரிய பாதுகாப்புடன் சென்னை வளசரவாக்கம் நாம் தமிழர் கட்சி அலுவலத்திற்கு விக்னேஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று இரவு 10 மணி வரை விக்னேஷ் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து மன்னார்குடிக்கு எடுத்துச் செல்லப்படும் விக்னேஷ் உடலுக்கு, நாளை காலை 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications