அமைச்சரவையில் புறக்கணிப்பு.. அதிமுகவை தோற்கடிக்க நாடார் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
சென்னை: அமைச்சரவையில் நாடார் சமூகத்திற்கு முக்கியத்துவம் தராத அதிமுகவை சட்டசபை தேர்தலில் தோற்கடிப்பது என்று, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சட்டசபை தேர்தலை ஒட்டி, அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பாரதிய கல்சூரி ஜெய்ஸ்வால் சம்வர்க்கிய மகாசபாவின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.அருள் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தென்மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், வேலை வாய்ப்பை பெருக்குவதற்காகவும் கொண்டு வரப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், நாங்குநேரி தொழிற்பூங்கா ஆகிய திட்டங்களை செயல்படுத்த விடாமல், அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
அரசு விழாக்களிலும், பொதுக்கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா, தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும் போது முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை சொல்லாமல், திட்டமிட்டு புறக்கணிக்கிறார்.
ஆவடி நகர மன்றத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட தீர்மானம் போட்டு, கடந்த திமுக, ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல ஆண்டுகள் ஆகியும், அதை நடைமுறைப்படுத்தாமல் தடுத்து வந்தது அதிமுக அரசு.
நாடார் இனத்தவருக்கு தமிழக அமைச்சரவையில், போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை மேலும், நாடார்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டங்களில்கூட நாடார் இனத்தவர்களுக்கு, அதிமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
ஒட்டு மொத்தமாக நாடார் சமூகத்தை புறக்கணித்து வரும் அதிமுகவை 2016 சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க நாடார் இனம் பாடுபட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications