நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அன்பழகன் அதிரடியாக கைது.. கையும் களவுமாக சிக்கிய ஆபீசர்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சதீஷ்குமார் என்பவர் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார். இவா் தமிழக அரசின் மாவட்ட தொழில் மையத்தில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்கு 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும். இந்த மானிய தொகையை விடுவிக்க சதீஷ்குமாாிடம் நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அன்பழகன் 12000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கிட 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி அரசால் வழங்கப்படுகிறது. மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிடவும், காற்றாலை மற்றும் சூரிய மின் ஆலை அமைக்கவும், விடுதி மற்றும் உணவகம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டுவதற்கும் கடனுதவி அளிக்கப்படுகிறது.

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில்களை விரிவுபடுத்துபவர்களுக்கும் பல்வேறு கடன் உதவிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செய்து வருகிறது. இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் இந்த கடன் உதவி அளிக்கப்படுகிறது. ஆனால் கடன் தொகைக்கான மானியத்தை பெற சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதும் சில இடங்களில் நடக்கிறது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள மரைக்கான்சாவடி பகுதியை சேர்ந்த 24 வயதாகும் சதீஷ்குமார் என்பவர் அந்த பகுதியில் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார். இவா் தமிழக அரசின் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்கு 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும். இந்த மானிய தொகையை விடுவிக்க சதீஷ்குமாாிடம் நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அன்பழகன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமார் இது குறித்து நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை(ரூ.12 ஆயிரம்) சதீஷ்குமார் எடுத்துச்சென்றுள்ளார். பின்னர் நாகை கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இருந்த அன்பழகனிடம் நேற்று கொடுத்தாராம்.
லஞ்ச பணத்தை அன்பழகன் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து சென்று லஞ்ச பணத்துடன் அன்பழகனை பிடித்து கைது செய்தார்கள். பின்னர் அவர் அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். சோதனையில் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.1 லட்சத்து ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications