காற்றில் பெயர்ந்து விழுந்த ரயில் நிலைய மேற்கூரை - பயணிகள் ஓட்டம்
ரயில் நிலைய முன் பதிவு அறையின் மேற் கூரை திடீரென காற்றில் பெயர்ந்து விழுந்ததால் முன்பதிவுக்கு நின்றிருந்த பயணிகள் அச்சத்துடன் ஓடினர்.
நாகர்கோவில்: ரயில் நிலைய முன் பதிவு அறையின் மேற் கூரை திடீரென காற்றில் பெயர்ந்து விழுந்ததால் முன்பதிவுக்கு நின்றிருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பல முக்கிய நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள முன் பதிவு மையத்தில் 6 கவுண்டர்கள் செயல்படுகின்றன. காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கி, மதியம் 2 மணி வரையிலும், பின்னர் மதியம் 2.15க்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் முன் பதிவு நடக்கிறது.
தினமும் ஏராளமான பயணிகள் முன்பதிவு மையத்துக்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் மாலை 6 மணியளவிலும் முன் பதிவுக்காக பயணிகள் கவுண்டர்கள் முன் காத்திருந்தனர். சிலர் அங்கு போடப்பட்டு இருந்த இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென முன் பதிவு மைய கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
பெயர்ந்து விழுந்த இடிபாடுகள் அங்கு போடப்பட்டு இருந்த இரும்பு நாற்காலிகளில் பயங்கர சத்தத்துடன் விழுந்து சிதறின. இதனால் முன் பதிவுக்காக வந்து இருந்த பயணிகள் அலறி அடித்தவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
கீழ் தளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் ஏதோ வெடிகுண்டு வெடித்து விட்டதா? என நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு டிக்கெட் முன் பதிவு மையத்தில் இருந்தவர்கள் அலறி அடித்தவாறு கீழே ஓடி வந்தனர். அதன் பின்னரே கட்டிடம் பெயர்ந்து விழுந்தது தெரிய வந்தது.
இது பற்றி அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்த சமயத்தில் அந்த பகுதியில் ஹெல்மெட் அணிந்தவாறு பயணி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவர் தலையில் கற்கள் பெயர்ந்து விழுந்தன. ஹெல்மெட் இருந்ததால் அவர் காயமின்றி தப்பினார். மற்றவர்களுக்கும் காயம் எதுவும் ஏற்பட வில்லை. அதிர்ஷ்டவசமாக வேறு எந்த வித அசம்பாவிதமும் நிகழ வில்லை என பயணிகள் தெரிவித்தனர்.