கணவனை மனைவி கொன்றதாக மர்ம போன்... போலீசாரை அலைக்கழித்த வாலிபருக்கு வலைவீச்சு
நாகர்கோவில்: கணவனை மனைவி கொலை செய்து விட்டதாக போலீசாருக்கு தவறான தகவல் அளித்து அலைக்கழித்த மர்ம நபரை நாக்ர்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று காலை சுமார் 3.30 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் அமைப்பு ஒன்று வந்தது. அதில், குளச்சல் அருகே கல்லுக்கூடத்தில் மனைவி ஒருவர் கணவனை கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்த அந்நபர், தன்னைப் பற்றிக் கூறாமல் இணைப்பைத் துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக இந்த தகவலை கட்டுப்பாட்டு அறை போலீசார் குளச்சல் போலீசுக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குளச்சல் போலீசார் கல்லுக்கூட்டம் பகுதிக்கு விரைந்து சென்று கொலை பற்றி விசாரணை நடத்தினார்கள். ஆனால், விசாரணையில் அங்கு அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை என தெரிய வந்தது.
சுமார் 3 மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு, போன் அழைப்பு தகவல் பொய்யானது என்பது உறுதியானது. எனவே போனில் பேசிய நபர் வீண்புரளியை கிளப்பி விட்டு போலீசாரை அலைக் கழித்தது தெரிய வந்தது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இதே போல் ஒருவர் போலீசுக்கு போன் செய்து மனைவியை கணவர் கொலை செய்து விட்டதாக மர்மநபர் ஒருவர் கூறி பரபரப்பைக் கிளப்பினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மேற்கண்ட இந்த இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே வாலிபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, இந்தக் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.