பேசாமல் குஷ்புவுக்குப் பதில் நக்மாவை தலைவராக்கி விடலாம்.. "போல்" முடிவைப் பாருங்கள்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி, இளங்கோவன் ராஜினாமா செய்த பிறகு காற்று வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. மியூசிக்கல் சேர் போல அந்த பதவியை நினைத்து பல முன்னணி தலைவர்கள் சுற்றி வருகிறார்கள். மியூசிக் எப்போது டெல்லியிலிருந்து, ஆஃப் செய்யப்படும் என்பதுதான் தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர் பதவி என்பது திமுக அமைச்சரவையை போல நிலையானது கிடையாது. அது, அதிமுக அமைச்சரவையை போன்றது. இன்று மந்திரி.. நாளை எந்திரி.. போலத்தான்.
யார் வேண்டுமானாலும் தலைவராக முடியும், அதே வேகத்தில், எப்போது வேண்டுமானாலும் கீழே சரியவும் வைப்பார்கள். எனவேதான் அதை மியூசிக் சேர் என செல்லமாக அழைக்கிறார்கள் காங்கிரஸ் தலைகள்.

சிதம்பரம், திருநாவுக்கரசர்
இந்த மியூசிக் சேரை தற்போது சுற்றி வருவதில் முன்னணியில் இருப்பவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்களான, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகிய இருவரும்.

முக்கிய தலைகள்
பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் ஆகியோரும், அந்த நாற்காலியை சுற்றி, மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருப்பதாக முந்தா நாள் கூட ஒரு தகவல் வந்தது.

பொது நபர் குஷ்பு
அட யாருக்கும் வேண்டாம்ப்பா.. எல்லோருக்கும் பொதுவான நபருக்கு கொடுத்துவிடலாம் என்றும் ஒரு பேச்சு. இதற்காகவே குஷ்புவை டெல்லிக்கு அழைத்து ராகுலும், சோனியாவும், மாற்றி மாற்றி பேசி அனுப்பி வைத்துள்ளார்களாம்.

நக்மாவுக்கு ஏன் வாய்ப்பு இல்லை
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு ஒரு வாய்ப்பு புலப்படும்போது, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா மட்டும் என்ன தப்பு செய்தார்.. அவரும் தமிழ் கலையுலகிற்கு தன்னால் முடிந்த சேவையை ஆற்றிவிட்டுதானே பட வாய்ப்பு இல்லாத நேரத்தில் பாலிட்டிக்சில் நுழைந்தார் என்ற பாசம் நமது வாசகர்களுக்கு உள்ளது.

குஷ்புவை விட நக்மாவுக்கு அதிக ஆதரவு
வாசகர்கள் எண்ணம், ஒன்இந்தியா தமிழ் தளத்தில் கேட்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது. 'தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு இவர்களில் யார் பொருத்தம்?' என்ற கருத்து கணிப்பில்தான் குஷ்புவைவிட நக்மாவுக்கு அதிக வாக்குகளை அளித்து ஆனந்தப்பட வைத்துள்ளனர் வாசகர்கள்.

அமோக ஆதரவு
இந்த கருத்து கணிப்பில் 23 சதவீதம் பேர் சிதம்பரத்திற்கு ஆதரவாக வாக்களித்து இப்போட்டியில் முதலிடத்தை கொடுத்துள்ளனர். 2வது இடம் திருநாவுக்கரசருக்குதானே என்று, நீங்களே நினைத்தால் ஏமாந்தீர்கள். 2வது இடம் நக்மாவுக்குதான். 'நக்மாவை மறந்து விட்டீர்களே' என கடைசியாக கொடுத்த ஆப்ஷனை தேடி சென்று கிளிக் செய்து ஆதரவு நல்கியுள்ளனர் வாசகர்கள். அவருக்கு 21 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

குஷ்புக்கு ஆறுதல்
இதில் 20 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தைதான் திருநாவுக்கரசரால் பிடிக்க முடிந்தது பெரும் சோகம். இருந்தாலும் குஷ்பு ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் தகவல். இந்த கருத்து கணிப்பில், பீட்டர் அல்போன்ஸ் பெற்ற 12 சதவீத வாக்குகளை முந்தி 13 சதவீத ஆதரவுடன் 4வது இடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார், குஷ்பு.

கராத்தே பாவம்
ஆனாலும், இரக்கமேயில்லாமல் 1 சதவீத ஆதரவைத்தான் கராத்தே தியாகராஜனுக்கு கொடுத்துள்ளனர் நமது வாசகர்கள். நாங்குநேரி எம்.எல்.ஏவான தொழிலதிபர் வசந்தகுமார் நல்லவேளையாக கடைசி இடத்துக்கு போகவில்லை என சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். அவர் தலைவராக வேண்டும் என நமது வாசகர்களில் 9 சதவீதம் பேர் ஆசைப்படுறாங்கோ..












Click it and Unblock the Notifications