லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு... கருணாஸ் மீது 'நமது அம்மா' தாக்கு
லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கும் என்று கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவரையும் விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது நமது அம்மா.
Recommended Video
சென்னை: மு.க.ஸ்டாலின் நடத்திய போட்டி சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் கலந்து கொண்டதை கண்டித்து நமது அம்மாவில் செய்தி வெளியானது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து அவர் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபையை கூட்டினார்.
இதில் அதிமுகவுக்கு எதிராக கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரியும் அடக்கம். இவர்கள் மூவரையும் விமர்சனம் செய்து நமது அம்மாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது.
பஃபூன் வேஷம்
அதில் இரட்டை இலை சின்னத்தாலும் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த அதிமுக தொண்டர்களின் இமைதுஞ்சா உழைப்பாலும் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரான மாற்றுக் கட்சியை சேர்ந்த நன்றிகெட்ட பேர்வழிகள் சிலர் திமுக நடத்திய கோமாளி மாதிரி சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள்....
குட்டையை நோக்கி ஓடும்
என்ன செய்வது.... பன்றியைக் குளிப்பாட்டி பட்டுத் துணி கட்டிவிட்டாலும் அது கழிவு நீர் குட்டையை நோக்கித்தான் ஓடும் என்பதையே உறுதி செய்திருக்கிறது இந்த நிகழ்வு..
பாத்திரமறிந்து
ஆனாலும் ஒன்று, கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு... பாத்திரமறிந்து பிச்சை இடு என்று நம் முன்னோர்கள் வகுத்துச் சொன்ன முதுமொழியை நாமும் கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை மேற்படி அநாமத்துப் பேர்வழிகளின் அநாகரிகச் செயல் சிந்திக்க வைக்கிறது..
இனி எப்படி தொகுதிக்குள்...
அது சரி , பொன்மனத்தாயின் பூ முகத்திற்காகவும், அவரது பொற்கரங்கள் சுட்டிக் காட்டிய பரிந்துரைக்காகவும், ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்கள், இன்றைக்கு ஆதாயத்திற்காக அணி தாவி இருக்கும் இந்த லொடுக்குப் பாண்டிகளை இனி எப்படி தொகுதிக்குள் தலைகாட்ட விடுவார்கள்...
ஆனால் மக்கள்
கழகம் மன்னித்து விடலாம்... அல்லது சட்டத்தின்படி தண்டித்தும் விடலாம்.... ஆனால் மக்கள் மன்றம் நன்றி கொன்ற ஈனப் பிறவிகளை நடமாட விடாதே?....
உரிய பாடத்தை ஓட்டு போட்ட மக்களே அரசியல் அவுசாரிகளுக்கு உணர்த்தும் தானே...?