குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொடூரக் கொலை
நாமக்கல்: நாமக்கல்லில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு . ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாராம். இதுகுறித்து உடனடியாக அந்தப் பகுதி மக்கள் பிரியாவின் கணவர் திருநாவுக்கரசுக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர், பிரியாவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதில், பிரியாவின் கழுத்து சேலையால் இறுக்கப்பட்டிருந்ததுடன், அவரது முகத்தை தரையில் தேய்த்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.