பேரைக் கெடுத்ததெல்லாம் கூருகெட்ட குக்கர்களே... தினகரனை திட்டும் "அம்மா"!
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு சிலை வைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்திருக்கப் போகிறது என்று நமது அம்மா நாளேடு கேட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீங்கள் எல்லாம் ஊருக்கு நடமாட முடியாமல் பண்ணை வீடுகளில் பதுங்கியிருப்பீர்கள் என்று சசிகலா குடும்பத்தினரை நமது அம்மா நாளிதழ் கட்டுரை சாடியுள்ளது.
நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியானது. நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு போட்டியாக இந்த நாளிதழ் வெளியாகி வருகிறது.
ஜெயலலிதாவிற்கு வைத்த சிலை சரியில்லை என்று டிடிவி தினகரன் உட்பட பலரும் கிண்டலடித்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக நமது அம்மா நாளிதழ் கட்டுரையில் டிடிவி தினகரனையும், அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக திட்டியுள்ளனர்.

சிலை சரியில்லையே
அம்மாவின் திரு உருவச்சிலையில் குறையென்று நீலக்கண்ணீர் வடித்து இருக்கிறது டோக்கன் கும்பல்! அம்மாவின் சிலையில் பொலிவில்லை என்று புரளிவிதைக்கும் அந்த கும்பல் அம்மாவை அவமானப்படுத்திவிட்டார்கள் என்றும் அம்மா உயிரோடு இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார் என்றும் ஆதங்கப்படுவது போல நாடகமாடுகிறது.

கேவலப்படுத்தியது யார்?
அடப்பாவிகளா வங்கத்துக் கடலோரம் கொண்டு சென்று எங்கள் தங்கத் தாரகையை அடக்கம் செய்து அந்த ஈரம் காய்வதற்குள்ளேயே அம்மா போல கொண்டை போட்டு, புட்டாமா பூசி அம்மாவை கேவலப்படுத்தியதே நீங்கள்தானே!.

அவசியம் என்ன?
இந்த லட்சணத்தில் அம்மா உயிரோடு இருந்திருந்தால் சிலையைப் பார்த்து கண்ணீர் வடித்திருப்பார் என்ற ஆதங்கம் வேறு, அட கூரு கெட்ட குக்கர்களே... அம்மா உயிரோடு இருந்தால் அவருக்கு சிலை வைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்திருக்கப் போகிறது?.

பதுங்கியிருப்பீங்களே
அது மட்டுமா, அப்படி அம்மா உயிரோடு இருந்திருந்தால் நீங்களெல்லாம் ஊருக்குள் நடமாட முடியாமல் பண்ணை வீடுகளில் அல்லவா பதுங்கிக் கிடந்திருப்பீங்க. அதனாலே அம்மாவின் பெயரைச் சொல்லி, குருதி உறிஞ்சிக் கொழுத்த கும்பல் அவரின் பெரும் புகழுக்கு இளைத்த களங்கம் போதும், இனியும் அந்த மகராசி பெயரைச் சொல்லி பெயரைச் சொல்லி பிழைப்பதை விட்டு விடுவதே உத்தமம்.












Click it and Unblock the Notifications