அதிமுகவிற்கு பச்சை துரோகம் செய்கிறார் பன்னீர்- நாஞ்சில் சம்பத்
சசிகலா மூலம் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு ஒ.பன்னீர் செல்வம் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்: தமிழகத்தின் 3வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வாசல் அமைத்து தந்தவர் சசிகலா என்பதை ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட முடியாது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சசிகலா மூலம் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு கட்சிக்கு ஓபிஎஸ் துரோகம் செய்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அதிமுக அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.
ஜெயலலிதா
அதிமுகவில் பெரும் தலைவராக விளங்கியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தை நிறுவிய எம்ஜிஆர் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு அவருடைய மறைவுக்கு பிறகு அதிமுகவை கட்டிக்காத்து இந்திய துணைக்கண்டத்தில் பெரிய கட்சியாக உயர்த்தியவர் அவர்.
சசிகலா
இந்த இயக்கத்தை வழி நடத்த பெரும் பங்கு வகித்தவர் சசிகலா. ஒரு போதும் சசிகலா கட்சியிலோ, ஆட்சியிலோ பதவிகளை அலங்கரிக்க நினைக்கவில்லை. தமிழகத்தின் 3வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வாசல் அமைத்து தந்தவர் சசிகலா என்பதை ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட முடியாது.
ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்றும் முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம்தான். ஆனால் இன்று சசிகலாவை தூக்கி எறிய வேண்டும் என்கிறார்.
பச்சை துரோகம்
இந்த கட்சியில் அனைத்து பதவி சுகங்களையும் அனுபவித்துவிட்டு அதிமுகவிற்கு பச்சைத்துரோகம் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம். எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அவர் வர வேண்டும்.
நூறு ஆண்டுகள் நிலைக்கும்
இன்று அதிமுகவிற்கு துன்பமான நேரம். கட்சியின் பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் சிறையில் உள்ளனர். இந்த இயக்கத்திற்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாங்கி இந்த இயக்கம் ஜெயலலிதா சொன்னதுபோல பல நூறு ஆண்டுகள் நிலைத்து நின்று ஜெயலலிதாவின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்.