கூர் இல்லாத அம்பாக மாறிவிட்டது ம.தி.மு.க ...: 'கலாய்க்கும்' மாஜி நாஞ்சில் சம்பத்
தேனி: மதிமுக கூர் இல்லாத அம்பாக மாறிவிட்டதாக தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் நாஞ்சில் சம்பத். இவர் தற்போது அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த சிலநாட்களாக மதிமுகவில் இருந்து முக்கிய பதவிகளில் உள்ள சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தேனியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
தேனி நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு தேனி நகர செயலாளரும், நகரசபை தலைவருமான முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போப்பை சந்தித்த அண்ணா...
தமிழக முதலமைச்சராக அண்ணா இருந்த போது, வெளிநாட்டு சுற்றுப்பயணமாக வாட்டிகன் சிட்டிக்கு போப் ஆண்டவரை சந்திக்க அவருடைய அரண்மனைக்கு சென்றார். அண்ணாவுக்கு 5 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டது.
என்ன பரிசு வேண்டும்...
அண்ணாவின் ஆங்கிலப் புலமையை கேட்ட, போப் ஆண்டவர், அண்ணாவை தொடர்ந்து பேசுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் 55 நிமிடங்கள் தொடர்ந்து அண்ணா பேசினார். அண்ணாவின் ஆங்கிலப்புலமையை கேட்ட போப் ஆண்டவர், அண்ணாவுக்கு பரிசு கொடுக்க விரும்பி ‘என்ன பரிசு வேண்டும் கேளுங்கள்' என்று கேட்டார். அண்ணா பரிசு ஏதும் வேண்டாம் என்று கூறினார்.
மைக்கேல் ரேனிடே விடுதலை...
பரிசு கொடுப்பது தங்களின் அரண்மனையின் வழக்கம் என்று கூறியதால், போர்ச்சுக்கல் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கோவாவின் விடுதலை வீரன் மைக்கேல் ரேனிடேயை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
அண்ணாவின் நூல்கள்...
அண்ணாவின் நூல்களை கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது தேசியமயமாக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணாவின் அனைத்து நூல்களையும் தேசியமயமாக்கினார்.
மதுவிலக்கு...
மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று இப்போது சிலர் கூச்சல் போடுகிறார்கள். மதுவிலக்கை ரத்து செய்து விட்டு 3 தலைமுறைகளை குடிகாரர்கள் ஆக்கியது தி.மு.க.தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் போடும் கையெழுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு என்று கருணாநிதி கூறுகிறார்.
கூர் இல்லாத அம்பு...
ம.தி.மு.க. இப்போது கூர் இல்லாத அம்பாக மாறி விட்டது. அந்த கட்சிக்காக நான் 49 வழக்குகளை சந்தித்தேன்' என இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி...
இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவக்குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எல்லப்பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைச் செயலாளரும், நகரசபைத் துணைத்தலைவருமான காசிமாயன் நன்றி கூறினார்.