Exclusive: ஒரு கோடி பேருடன் டிடிவி தினகரனுக்கு தமிழகத்தில் பிரமாண்ட வரவேற்பு.. நாஞ்சில் சம்பத் 'நச்'
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுகளை திறந்து வருகிறார் தினகரன். தினகரன் தமிழகத்தில் கால்பதிக்கும்போது ஒரு கோடி பேர் வரவேற்போம்என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: நீதியை நீண்டநாள் புதைத்து வைத்துவிட முடியாது என்று அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திகார் சிறையை விட்டு வெளியே வரும் தினகரன் தமிழகத்தில் கால்பதிக்கும்போது ஒரு கோடி பேர் வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் மூலம் லஞ்சம் தர முயன்றதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தினகரனுக்கு உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று 4வது முறையாக டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு விசாரணைக்கு வந்தது.
டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா இருவருக்கும் ஜாமீன் அளிப்பதாக நீதிபதி கூறினார். இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களது பாஸ்போட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் வெளியூர் செல்லக் கூடாது என்ற நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இது குறித்து அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்தார்.
தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது பற்றி பேசிய நாஞ்சில் சம்பத், நியாயத்தின் கதவுகள் தினகரனுக்காக திறந்திருக்கின்றன. தினகரனை டெல்லி திகாரில் அடைத்த அநியாயத்துக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
நீதியை நீண்ட நாள் புதைத்து வைத்துவிட முடியாது. பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுகளை திறந்து வருகிறார் தினகரன். தமிழகத்தில் தினகரன் கால்பதிக்கும்போது கரை கடந்த உணர்ச்சியோடும் உற்சாகத்தோடும் ஒரு கோடி பேர் வரவேற்போம் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார். வல்லமையுள்ள தலைவர் வருகிறார் அவருக்காக எங்கள் விழிகள் காத்திருக்கின்றன என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.