பதவி பறிப்பால் அதிருப்தி.. திமுகவில் இணைகிறார் நாஞ்சில் சம்பத்?
சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், திமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் இருந்து வைகோ விலகி மதிமுகவை ஆரம்பித்தபோது, உடன் சென்ற முக்கிய புள்ளிகளில் ஒருவர் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை, மதிமுக மேடைகளில் வறுத்தெடுத்து வந்தார்.
இந்நிலையில், வைகோவுடன், நாஞ்சிலாருக்கு பிளவு ஏற்பட்டு, அதிமுகவில் ஐக்கியமானார். நாஞ்சிலாருக்கு, அதிமுகவின், துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தத்து பித்து பேட்டி
இந்நிலையில், தொலைக்காட்சி சேனல்களின் கலந்துரையாடல்களில் பங்குபெற்று வந்த நாஞ்சில், தலைமைக்கு பிடிக்காத வகையில் பேசிவந்ததால், அவரின் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மனக்குமுறல்
தேர்தல் நெருங்கும் நிலையில், பதவி பறிப்பு நடந்துள்ளதால், தனக்கு கட்சியில் செல்வாக்கு குறைந்துவிடும், தேர்தல் பரப்புரைகளில் தன்னை பேச நிர்வாகிகள் அழைக்க மாட்டார்கள் என்ற மனக்குமுறலில் உள்ளார் நாஞ்சில் சம்பத்.

கடிதம்
எனவே, தனது நீக்கம் குறித்த மனக்குமுறலை அதிமுக தலைமைக்கு கடிதமாக நாஞ்சிலார் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதிமுகவில் இருந்து தான் விலகிய பிறகு அதிமுக தலைமைக்கு காட்டிய விசுவாசம் குறித்து நாஞ்சிலார் தனக்கே உரித்தான, மனதை உருக்கும் வார்த்தைகளோடு கடிதம் எழுதியுள்ளாராம்.

திமுகவுக்கு
ஒருவேளை, இந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லையென்றால், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேரும் திட்டத்தில் நாஞ்சிலார் உள்ளார் என கூறப்படுகிறது. திமுகவுக்கு இதுபற்றி தூது விட்டிருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து தனது ஆதரவாளர்களிடம் நாஞ்சில் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக யோசனை
திமுகவுக்கு நாஞ்சில் சம்பத் வந்தால், சாதகமா அல்லது பாதகமா என்பது பற்றி திமுக அலசி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. சமூக தளங்களில் நாஞ்சிலார் படாதபாடு படுவதால் திமுக தரப்பில் யோசனை கொஞ்சம் இழுவையாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்.












Click it and Unblock the Notifications