தாண்டமுடியாத அகழி டிடிவி தினகரன்... நாஞ்சில் சம்பத் 'தடாலடி' புகழாரம்!
டிடிவி தினகரன் தாண்ட முடியாத அகழி, அணைக்க முடியாத நெருப்பு, தள்ளி போட முடியாத தாகம் என்று நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார்.
சென்னை: அதிமுக டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சித் சம்பத் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் வார்தா புயலை காட்டிலும் மிக வேகமாக புயல் வீசியது.
தினகரனை நம்பி தாங்கள் இல்லை என்று ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால் தினகரனுக்கு இதுவரை 31 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி அரசு கவிழும் நிலை ஏற்படலாம் என்று அரசியல் நோக்காளர்கள் கருதுகின்றனர்.
தினகரன் கட்டுப்பாட்டில்...
டிடிவி தினகரனை அவரது பெசன்ட் நகர் வீட்டில் சந்தித்து விட்டு வெளியே வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிகையில், அதிமுக தினகரனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
காட்டிக் கொடுக்க...
கட்சியையும், ஆட்சியையும் காக்க தினகரனால் மட்டுமே முடியும். டிடிவி தினகரன் வழி நடத்த வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர் அவர். இன்னும் 2 மாதங்களில் தேர்தல் வரும் என்று காட்டி கொடுக்க கதவுகளை திறந்தே வைத்திருக்கிறார் எம்.பி. மைத்ரேயன்.
அதிமுக வெற்றி பெறும்
முதல்வர் பதவியை மட்டுமே குறிகோளாக கொண்டுள்ள முக ஸ்டாலினும் இதேபோல் மறுதேர்தல் வரும் என்று கூறி வருகிறார். அதிமுக ஆட்சியின் ஆயுளை மக்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி ஆட்சி நடக்கும். அந்த ஆயுள் முடிந்த பிறகும் சரி, தற்போது தேர்தல் வந்தாலும் சரி அதிமுகதான் வெற்றி பெறும்.
பச்சை துரோகி
ஓ.பன்னீர் செல்வம் ஒரு பச்சை துரோகி. தங்களால் ஆட்சி கவிழாது என்று தான் செய்த தவறுக்கு ஓபிஎஸ் பிராயசித்தம் தேடுகிறார். டிடிவி தினகரன் வித்தியாசமான தலைவர். தள்ளிபோட முடியாத தாகம், தாண்ட முடியாத அகழி, அணைக்க முடியாத நெருப்பு என்றார் நாஞ்சில் சம்பத்.