டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகல்: அரசியலிலும் இனி இல்லை- நாஞ்சில் சம்பத் திடீர் அறிவிப்பு
டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கடந்த 15-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார். இந்த விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் தான் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்துகிறார் டிடிவி.
வாழ்த்துகள்
இவ்வாறு அலட்சியப்படுத்திவிட்டு கட்சியை நடத்தமுடியும் என்று அவர் நம்புகிறார். அதற்கு எனது வாழ்த்துகள். நான் மதிக்கும் மிகப் பெரிய தலைவரை அலட்சியப்படுத்தி படுகொலை செய்துவிட்டார் டிடிவி.
அநியாயம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. டிடிவி தினகரனின் அநியாயத்தை என்னால் தாங்க முடியாது.
|
இனி இலக்கிய மேடைகளில்...
இதற்காக எதிர்வினையாற்றும் வல்லமை என்னிடம் இல்லை. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அரசியலில் இருந்தும் நான் விலகுகிறேன். எந்த கட்சியிலும் நான் இல்லை. இனி இலக்கிய மேடைகளில் பார்க்கலாம்.
குடும்ப அலுவல்
அரசியல் சிமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். குரங்கணி காட்டுத் தீவிபத்தில் நாஞ்சிலின் உறவினர் தவறிவிட்டதால் அவர் கட்சி அறிவிப்பு கூட்டத்துக்கு வரவில்லை என்று சம்பத் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
முன்கூட்டியே சொன்னது
தினகரனுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் பனிப்போர் நிலவி வருகிறது என்ற தகவலை நேற்றே நமது ஒன் இந்தியா தமிழ் தளம் செய்தி வெளியிட்டது. ஒரே ஒரு சீட்டு போட்டு உட்கார தினகரன் என்ன ஜெயலலிதாவா என்று நாஞ்சில் சம்பத் கேட்டதை அறிந்த தினகரன் கொதித்துவிட்டாராம். இதன் விளைவுதான் சம்பத் மேலூர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார் என்ற விவரங்களையும் நாம் நேற்றே பதிவு செய்துவிட்டோம்.