தினகரனுடன் மல்லுக்கட்டும் நாஞ்சில் சம்பத்... மேலூர் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? பரபர தகவல்கள்
தினகரனுடன் முட்டல் மோதலை தொடங்கிவிட்டார் நாஞ்சில் சம்பத்.
Recommended Video
சென்னை: தினகரனோடு நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் பனிப்போர் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கக் கிளம்பிவிட்டார் தினகரன். ' திராவிட இயக்கத்தை மீட்க வந்த மீட்பர் தினகரன்' எனப் பேசி வந்த நாஞ்சில் சம்பத், மேலூர் கூட்டத்தில் மைக்கைப் பிடிக்கவில்லை.
வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் இருந்தபோதும், தொடக்கத்தில் இருந்து சசிகலாவுக்காக குரல் உயர்த்திய சம்பத் வரவில்லை. சம்பத் ஆப்சென்ட் ஆனது குறித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம்.
கார் கேட்டாரா சம்பத்?
" நாஞ்சில் சம்பத்துக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ' இன்னோவா கார் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். இருந்த ஒரே காரையும் பன்னீர்செல்வம் பிடுங்கிவிட்டார். இப்போது இருந்த காரும் போய்விட்டது. ஒரு கார் வாங்கிக் கொடுங்கள்' எனக் கேட்டுக் கொண்டே இருந்தார். சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் தினகரன். எதற்கெடுத்தாலும் அவரிடம் உதவிகள் கேட்டுக் கொண்டிருப்பதை சக நிர்வாகிகள் விரும்பவில்லை. ''
தினகரன் அமைப்பால் அதிருப்தி
மேலும் புதிய கட்சியின் பெயரில் எம்.ஜி.ஆர் பெயரும் திராவிடமும் இருக்க வேண்டும். அப்போதுதான் தொண்டர்களிடம் நாம் செல்ல முடியும். அம்மாவை முன்னிறுத்துவது முக்கியம்தான். அதேநேரம், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை நெருங்குவதற்கு இவை இரண்டும் அவசியம்' எனக் கூறியிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த நிர்வாகிகள், ' இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். இரட்டை இலையை மீட்கும் வரையில் இந்தப் பெயர் இருக்கும். அதன்பிறகு கலைத்துவிடலாம். நமக்கு தமிழகம் முழுக்க அடையாளம் இருக்கிறது' என விளக்கியும், ' இந்தப் பதிலில் எனக்குத் திருப்தியில்லை' எனக் கூறிவிட்டார்.
தினகரன் என்ன ஜெயலலிதாவா?
அதன்பிறகு கூட்டத்துக்கும் அவர் வரவில்லை. தொடர்ந்து விசாரித்தபோது, ' மேடையில் ஒரே ஒரு சீட்டுதான் போடப்படும். அந்த நாற்காலியில் தினகரன் அமர்வார் என்கிறார்கள். ஒரே ஒரு நாற்காலி போடுவதற்கு, அவர் என்ன ஜெயலலிதாவா?' எனக் கேட்டிருக்கிறார் சம்பத். இந்தப் பதிலால் கொதித்துவிட்டார் தினகரன்.
சம்பத்துக்காக செலவு
இதன் விளைவாகத்தான் மேலூர் கூட்டத்தை அவர் புறக்கணித்துவிட்டார். போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்த அன்றே, சம்பத்துக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ' சென்னை வரும்போதெல்லாம் மல்லிகை விடுதியில் தங்குகிறேன். அந்த விடுதிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கடன் இருக்கிறது என்றார். அதையும் அடைத்துவிட்டோம். அவருடைய மகனுக்கான மருத்துவப் படிப்புச் செலவையும் நாங்கள்தான் பார்த்தோம். இதனையடுத்து, பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டையும் ஒதுக்க வைத்தோம். இவ்வளவும் செய்துவிட்ட பிறகு இன்னமும் எதிர்பார்த்தால் என்ன செய்வது?" என்கின்றனர் குமுறலோடு.
உறவினர் மரணத்தால் வரவில்லை?
ஆனால் சம்பத் வட்டாரமோ, குரங்கணி விபத்தில் அவருடைய உறவினர் விபின் இறந்துவிட்டார். அந்தத் துக்கத்தில்தான் அவர் வரவில்லை. தினகரனோடு எந்த மோதலும் இல்லை" என்கின்றனர்.