இங்க ஒரு குத்து.. அங்க ஒரு குத்து.. தவெகவின் கூட்டணி குழப்படி.. மாறி மாறி பேசும் நிர்வாகிகள்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. தவெக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்தனர். (Assembly Election 2026)
இதேபோல அதிமுக பாஜக கூட்டணியில் தவெக இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துவிட்டது. அதேநேரத்தில் கூட்டணி விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முற்றிலும் மாறி மாறி பேசுவது சர்ச்சையாகியுள்ளது.

தவெக கூட்டணி குளறுபடி
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். புது வரவான தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளனர். கூட்டணி ஆட்சி என தடதடக்க ஆரம்பித்த தவெக தற்போது அதே கூட்டணி விவகாரத்தில் வெல வெலத்து போயுள்ளது.
சென்னை பனையூரில் 10.03.2026 தேதி தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "வியூகங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. எதுவாக இருந்தாலும் எங்கள் கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். கடந்த 7 - 8 மாதங்களாக பல்வேறு வியூகங்களை பார்த்துவிட்டோம். அது எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. தவெக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை" என்றார்.
நிர்வாகிகள் இரட்டை வேடம்
சென்னை கொடுங்கையூரில் 17.03.2026 தேதி நடந்த நிகழ்ச்சியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "நம் அண்ணனுக்கு பல்வேறு ஆஃபர்கள் கொடுத்தனர். 50 - 50, நீங்கள் 90, நாங்கள் 90, நீங்கள் இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சர், நாங்கள் இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சர் என்று எல்லா ஆஃபர்களையும் கொடுத்தனர்.
அதற்கு எங்கள் அண்ணன் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். எங்களுக்கு ஆஃபர் தேவை இல்லை. தமிழக மக்களுடைய உண்மையான நம்பிக்கையை நான் உருவாக்குவேன். மதச்சார்பற்ற சமூக நீதிக்கான அரசை நான் உருவாக்குவேன். அதற்கான வலிமையை தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கும்" என்றார். தவெக உயர்மட்ட நிர்வாகிகளே மாறி மாறி பேசுவது கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications