"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு
சென்னை: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் காரணமாக இப்போது கேஸ் பற்றாக்குறை நிலவுகிறது. கேஸ் சப்ளை சிக்கலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே எல்பிஜி நுகர்வோர் கேஸ் சிலிண்டரை புக் செய்யும் விதிமுறைகளில் மிக முக்கியமான மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுக்க கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மோதல் தான் இதற்குப் பிரதான காரணம். நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக வணி பயன்பாடு கேஸ் சிலிண்டர்களுக்கு பதிலாகத் தனிநபர் பயன்பாடு கேஸ் சிலிண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விதிகளில் மாற்றம்
இதற்கிடையே அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரும் eKYC எனப்படும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தைக் கட்டாயம் செய்ய வேண்டும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதை Aadhaar FaceRD app மூலமாகவோ அல்லது எந்த நிறுவனத்தில் இருந்து கேஸ் புக் செய்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் டீலர் இந்த விவகாரத்தில் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.
தட்டுப்பாடு
மத்திய கிழக்கு மோதல் சூழலால் இந்தியா முழுவதும் எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட இந்த மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. அந்த வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி அழிப்போம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதுவே கேஸ் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. போர் இன்னும் தொடரும் சூழலில், நிலைமை மேலும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது.
மாற்று வழிகள்
கேஸ் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பலரும் இண்டக்ஷன் பக்கம் திரும்பியுள்ளனர். இண்டக்ஷன் ஸ்டவ்களை வாங்கி குவிக்கிறார்கள். இதன் காரணமாக அமேசான், ஜெப்டோ உள்ளிட்ட தளங்களில் இண்டக்ஷன் ஸ்டவ்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. இண்டக்ஷன் ஸ்டவ்களை வாங்க முடியாத மக்கள், குறிப்பாகக் கிராம மக்கள், மீண்டும் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
பதுக்கல் அதிகரிப்பு
நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், கேஸ் விலையும் அதிகரித்துள்ளது. இந்த மாதம் தான் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர், தனி நபர் பயன்பாடு கேஸ் சிலிண்டர் என இரண்டுமே உயர்ந்தது. இப்படி ஒரே நேரத்தில் விலை ஏறுவதாலும் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாலும் சிலர் கேஸ் சிலிண்டர்களை பதுக்க ஆரம்பித்துள்ளனர். இதுபோல கேஸ் சிலிண்டர்களை பதுக்குவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இப்படி தான் கர்நாடகாவின் கெங்கேரி பகுதியில், எல்பிஜி சிலிண்டர்களைப் பதுக்கி அதிக விலைக்கு விற்க முயன்ற 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் காவல்துறை, காவலர்களின் விடுமுறைகளை ரத்து செய்து, பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையைத் தடுக்க சிலிண்டர் சேமிப்புக் கிடங்குகள் அருகே 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications