பள்ளிக்கரணையில் 71500 கோடி இழப்பு.. ஒரு லட்சம் பட்டா உரிமையாளர்களுக்கு சிக்கல்.. கிரெடாய் விளக்கம்
சென்னை: சென்னை பள்ளிக்கரணை ராம்சர் பகுதியில் முறையான அடையாளப்படுத்தும் விஷயத்தில் கூடுதலாக 550 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறும் 'கிரெடாய் அமைப்பு, இதன் காரணமாக 71 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், லட்சக்கணக்கான மக்கள் பட்டா வைத்திருந்தாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளது. எனவே பள்ளிக்கரணை ராம்சர் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுமான தடையை திரும்பப்பெறவேண்டும் என்று 'கிரெடாய்' வலியுறுத்தியிருக்கிறது.
தென் சென்னையில் வெள்ளத்தடுப்பு நிலமாக இருப்பது தான் பள்ளிக்கரணை ஏரி. சதுப்புநிலமான இந்த நன்னீர் ஏரி உலகின் அபூர்வமான ஒரு ஈரநிலம் ஆகும். 2022-ல் இதற்கு 'ராம்சர் தளம்' என்ற சர்வதேச அங்கீகாரம் வுழங்கப்பட்டது. உலகளவில் அழியப் போகும் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் வாழும் இடங்களைப் பாதுகாக்கவே 'ராம்சர் தளம்'என்ற தகுதி வழங்கப்பட்டது. இந்த பள்ளிக்கரணை ஏரி என்பது பல ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காலத்தில் இருந்து. மக்கள் நெருக்கம் காரணமாக அதன் பரப்பளவு பெருமளவு சரிந்தது.

தென்சென்னையில் வெள்ளப்பாதிப்புகளுக்கு இந்த ஏரியின் அளவு சுருங்கியதே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த பள்ளிக்கரணை ஏரி தான், தென்சென்னையில் வெள்ள வடிகாலாகவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் ஏரியாகவும் செயல்படுகிறது. அதேநேரம் பள்ளிக்கரணை ராம்சர் பகுதியில் முறையான அடையாளப்படுத்தும் விஷயத்தில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறை, அங்குள்ள கட்டுமானங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ராம்சர் விதிகளின்படி, பள்ளிக்கரணையின் ஈரநிலத்தைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்திற்கு 'தாங்கல் மண்டலம்' அமைக்கப்படுகிறது. அங்கு ரசாயனக் கழிவுகள் கொட்டுவது, பெரிய அளவிலான நிலத்தடிப் பயன்பாடுகள் மற்றும் கனரகக் கட்டுமானங்கள் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரியல் எஸ்டேட் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' சென்னையின் தலைவர் மெஹூல் தோஷி, துணை தலைவர்கள் சிவகுருநாதன், பு.எஸ்.எஸ்.கிருஷ்ணன் உட்பட ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், பள்ளிக்கரணை ராம்சர் பகுதியில் முறையான அடையாளப்படுத்துதல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் கூடுதலாக 550 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டிருககிறது. இதனால் அதனை சுற்றியுள்ள 1 கி.மீ. பரப்பளவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது சுற்றியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.
சுமார் ரூ.71 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இழப்பை சந்தித்திருக்கிறது. எனவே பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்ட 1,248 ஹெக்டேர் நிலத்தில், கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள 550 ஹெக்டேர் நிலத்தை முறையாக அடையாளப்படுத்தவேண்டும்.
சதுப்புநிலத்தை சுற்றிலும் ஒரேமாதிரியாக 1 கி.மீ. தொலைவை எல்லையாக நிர்ணயிப்பது அறிவியல் பூர்வமானது கிடையாது. சதுப்புநிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதியை அறிவியல் பூர்வமாக நிர்ணயித்து, இறுதி செய்து அரசாணை வெளியிடும் வரை 1 கி.மீ. சுற்றளவிற்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த கட்டுமான தடையை திரும்பப்பெறவேண்டும்.
அதற்கிடையில் தடைமறைவாக்கப்பட்ட இந்த 1 கி.மீ. எல்லைக்குள் ஏற்கனவே உள்ள திட்ட அனுமதிகள், புதுப்பித்தல்கள், தடையில்லா சான்றிதழ்கள், தனி மனைகளுக்கான விண்ணப்பங்கள், வீட்டுவசதி மற்றும் திட்டங்களுக்கான கடன்கள், பிற வளர்ச்சி பணிகளுக்கான செயல்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்கவேண்டும்" இவ்வாறு கிரெடாய் அமைப்பினர் கூறினர்.














Click it and Unblock the Notifications