பத்திரப்பதிவு ஆபீசுக்கே வர வேண்டாம்.. ஜூலை 17 முதல் புதிய நடைமுறை.. முழுமையான விவரம்
சென்னை: பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (அதாவது ஆன்லைன் மூலம்) நடைமுறையில் உள்ளது. இது 17-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது. அதன்படி முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பணிகளை வருகை இல்லா ஆவணப்பதிவு மூலம் எளிமையாக மேற்கொள்ளலாம் என பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கூறினார்.
பத்திரப்பதிவுத் துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் பத்திரப்பதிவு துறையின் செயலாளர் குமரகுருபரன், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கலந்து கொண்டு அவர்களிடம் விவாதித்தார். பின்னர் லோகேஷ் தமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (அதாவது ஆன்லைன் மூலம்) நடைமுறையில் இருக்கிறது. இது ஜூலை 17-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்படும். அதன்படி முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பணிகளை வருகை இல்லா ஆவணப்பதிவு மூலம் எளிமையாக மேற்கொள்ளலாம்.
இந்த புதிய நடைமுறையின்படி பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நில விற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவை (லாகின்) தங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம்.
ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். பின்னர் இணையவழி கட்டணம் செலுத்தி, இணைய வழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம். சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண ரசீது, சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையெழுத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும். இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஓர் உதவி மையம் செயல்படும்" இவ்வாறு அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கூறினார்.
பதிவுத்துறை பணிகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு விரும்புகிறது. இதன்படி, பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை எளிமையான முறையில் சமர்ப்பிக்க ஏதுவாக "வருகை இல்லா ஆவணப்பதிவு" கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்படி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பத்திரப்பதிவுக்காகச் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமே இருக்காது. ஆவணம் எழுதுபவர்கள், பெறுபவர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்களுடன் ஆதார் விவரங்களுடன், கைரேகை அல்லது கருவிழிப் படலம் மூலம் ஆன்லைனிலேயே துல்லியமாகச் சரிபார்க்கப்படுவதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்கிறது அரசு. இந்த திட்டம் தான் வரும் ஜூலை 17 முதல் நடைமுறைக்கு வருகிறது.














Click it and Unblock the Notifications