வேளச்சேரி புதிய பாலம் திட்டத்திற்கு சிக்கல்.. சென்னை மாநகராட்சியில் 700 கோடி டெண்டர்கள் ரத்து
சென்னை : தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு அமைந்த பின்னர் மாநிலத்தில் பெரும்பாலான மாநகராட்சியின் செலவினங்களை முறைப்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியான சென்னை மாநகராட்சியின் செலவினங்களை முறைப்படுத்தும் வகையில் ரூ.700 கோடி வரையிலான டெண்டர் பணிகளை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி புதிய பாலம் திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகரும் மிகப்பெரிய மாநகராட்சியுமான சென்னையின் ஓராண்டு பட்ஜெட் என்பது சுமார் 10 ஆயிரம் கோடியாகும். இந்த நிதியாண்டில் சுமார் ₹9,319 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் வருவாய் செலவினம் மட்டுமே ₹6,146 கோடியாகும். வருவாய் பற்றாக்குறை என்பது ₹1,602 கோடியாக இருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பின்னர் சென்னை மாநகராட்சியின் செலவினங்களை முறைப்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்திருந்தது. மேலும், சிறிய அளவிலான 150 டெண்டர்களையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.

இதேபோல, கவுன்சிலர்களுக்கான வார்டு பராமரிப்பு நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் தமிழக அரசு குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் சென்னை மாநகராட்சிக்கான தற்போதைய செலவுகளை மேலும் குறைக்கவும், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகுக்கவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட ரூ.700 கோடி வரையிலான டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்திருககிறது. மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை காரணமாக ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதேபோல, சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரையில் நிலுவைத் தொகை இருப்பதால் அதை முறைப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த ஒரு பகுதியாக வருவாயைப் பெருக்கும் வகையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி ஆகியவற்றை முழுமையாக வசூலிக்க மண்டலம் மற்றும் வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சொத்துவரி மூலம் ₹2,450 கோடியும், தொழில்வரி மூலம் ₹600 கோடியும் வருவாய் ஈட்ட அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்கள்.
இதனிடையே டெண்டர் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையில் வேளச்சேரி புதிய பால திட்டம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.310 கோடி ஆகும். வேளச்சேரியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், இப்பணிகள் ரத்து செய்யப்பட்டு மறு ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கி இருக்கிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை மாநகராட்சிக்கு வருவாய் குறைவாகவும், செலவினங்கள் அதிகமாகவும் உள்ளது. எனவே, அதிக நிதி தேவைப்படும் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரூ.100 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான டெண்டர்களும் தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். சென்னை மாநகராட்சியின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு, இந்தத் திட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் புதிய டெண்டர்கள் கோரப்படும். அதேநேரம் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித் தரும் திட்டங்கள் எந்தவிதத் தடையுமின்றி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும்' என்று கூறினார்கள்.














Click it and Unblock the Notifications